ரூபாய் நோட்டு செல்லாது முடிவு துணிச்சலான செயல் அல்ல.. முட்டாள் தனமானது… ராகுல்காந்தி கடும் தாக்கு
ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் முடிவு முட்டாள் தனமானது என்று ராகுல்காந்தி கடுமையாக பேசியுள்ளார்.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடி அரசின் முடிவு துணிச்சலான முடிவு அல்ல என்றும் அது முட்டாள் தனமான முடிவு என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து போராட்டத்தை நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
கடந்த மாதம் இதே நாளில்தான் ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அறிவித்தார். அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த நாளான இன்று, நாடாளுமன்றத்திற்கு எதிரே எதிர்க்கட்சியினர் ஒன்று கூடி, போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட எம்பிக்கள் அனைவரும் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை கண்டிக்கும் வகையில் கறுப்பு பட்டையை சட்டையில் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
இந்தப் போராட்டத்தில் ராகுல்காந்தி, "திட்டமிடப்படாத மோடி அரசின் செயலால் ஏழைகள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் நடவடிக்கை நாட்டையே சின்னாபின்னமாக ஆக்கிவிட்டது. கறுப்பு பணம், கள்ள நோட்டு, பயங்கரவாதிகள், பணம் இல்லாத பொருளாதாரம் என்று மாறிமாறி மோடி பேசி வருகிறார். மோடி அரசு பொருளாதார சூதாட்டம் நடத்துகிறது" என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.
ரோம் நகர் பற்றி எரியும் போது, ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னன் நீரோவுடன் மோடியை ஒப்பிட்டு ராகுல்காந்தி பேசினார். பேடைம் போன்ற ஒரு சில இ வாலட் கம்பனிகள் பயன்பெறுவதற்காக உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.