பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைப்பா.. மோடி சின்னப்புள்ளைத்தனம்.. ராகுல் காந்தி காட்டம்
பெட்ரோல் டீசல் லிட்டருக்கு ஒரு பைசா குறைத்தது மோடியின் சிறுபிள்ளைத்தனத்தைக் காட்டுகிறது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு பைசா குறைத்தது மோடியின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைந்ததையொட்டி, 19 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையேற்றம் கடந்த 16 நாட்களாகத் தொடர்ந்து சராசரியாக 20 முதல் 30 பைசா வரை அதிகரித்து வந்தது.
இந்த விலையேற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து வந்தன. இந்நிலையில், பெட்ரோல் விலை 80 ரூபாயையும், டீசல் விலை 70 ரூபாயையும் தாண்டியுள்ளது பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் அவதி
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை விரைவில் குறையும் என்று மத்திய அரசு தொடர்ந்து வந்தாலும் விலையேற்றம் அதிகரித்து வருவது பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
இதனையடுத்து நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 60 பைசாவும், டீசல் 56 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. ஆனால், அறிவிப்பு வெளியான அடுத்த ஒரு மணிநேரத்திலேயே கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட தவறால் விலைக்குறைப்பில் தவறு ஏற்பட்டுவிட்டதாகவும், பெட்ரோல் டீசல் விலையில் ஒரு பைசா குறைக்கப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
|
மக்களுக்கு உதவுமா ?
இதுகுறித்து ட்விட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள பிரதமரே ! பெட்ரோல், டீசல் விலையை ஒரு பைசா குறைத்துள்ளீர்கள். ஒரு பைசா விலைக்குறைப்பு எந்த விதத்தில் மக்களுக்கு உதவும் ?
சவால் என்ன ஆனது ?
இது உங்கள் சேட்டைப் புத்தியைக் காட்டுகிறது. ஆனால், இது மோசமான, சிறுபிள்ளைத் தனமான நடவடிக்கை. கடந்த வாரம் எரிபொருள் விலை குறைப்புக்கு நான் விடுத்த சவாலுக்கு, இது எந்த விதத்திலும் பதிலாகாது என்று சாடியுள்ளார்.