பேருதான் மேக் இன் இந்தியா... கிடைப்பதெல்லாம் சீனப் பொருள்கள்தான்!- ராகுல் காந்தி
ராஜ்கோட்: மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி சொல்லிக் கொண்டாலும், அவரது மாநிலமான குஜராத் முழுவதும் சீனத் தயாரிப்புகளே கிடைக்கின்றன என காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், ராஜ்கோட்டில் தொழில்துறையினருடன் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "மேக் இன் இந்தியா' என பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் கடிகாரம், கேமரா, ஆடைகள், செல்போன்கள் என இங்குள்ள கடைகளில் சீனப் பொருட்கள்தான் கிடைக்கின்றன. குஜராத்தில் மோடி அரசு அமைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை கூட சீனாவில் செய்ததுதான்.
அவர்களது கட்சிக்குத் தேவையான பொருள்களைக் கூட சீனாவில்தான் தயாரித்துள்ளனர்.
‛மேக் இன் இந்தியா' திட்டம் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என மோடி கூறினார். ஆனால் இத்திட்டம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
130 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில், ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை தந்தால் போதுமா? இது எந்த அளவு தோல்வித் திட்டம் என்பது தெரியவில்லையா," என்றார்.