மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார் "ரபேல் மினிஸ்டர்" நிர்மலா சீதாராமன் - ராகுல் கடும் தாக்கு
டெல்லி: "ரபேல் மினிஸ்டர்" நிர்மலா சீதாராமன் மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்பதை அவர் ரபேல் மினிஸ்டர் என்று விளித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ராகுல் காந்தி போட்டுள்ள டிவீட்டில், ஊழலை நியாயப்படுத்தி பேசுமாறு பணிக்கப்பட்டுள்ள ரபேல் மினிஸ்டர் தான் பேசி வருவது பொய் என்பதை அவரே தொடர்ந்து நிரூபித்து வருகிறார். முன்னாள் எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.எஸ். ராஜு அளித்துள்ள ஒரு பேட்டியின் மூலம் நிர்மலா சீதாராமன் பேசுவது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.
ரபேல் விமானத்தை கட்டமைக்கும் தகுதி எச்ஏஎல் நிறுவனத்திற்கு உள்ளது என்று ராஜு கூறியுள்ளார். இதற்கு மேலும் நிர்மலா சீதாராமன் சொல்லும் பொய்களை நம்ப முடியாது, ஏற்க முடியாது. அவர் தனது பதவியில் நீடிக்கும் தகுதியையும் இழந்து விட்டார். அவர் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.
The RM (Rafale Minister) tasked with defending corruption has been caught lying again. The former HAL Chief, T S Raju, has nailed her lie, that HAL didn’t have the capability to build the RAFALE. Her position is untenable & she must resign. https://t.co/7mKXV5wo8x
— Rahul Gandhi (@RahulGandhi) September 20, 2018
முன்னதாக டி.எஸ். ராஜு அளித்த ஒரு பேட்டியில், இந்தியாவிலேயே ரபேல் விமானங்களை கட்டமைக்க முடியும். அதற்கான தகுதியும், திறமையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு உண்டு. நமது என்ஜீனியர்கள் திறமையானவர்கள். இதுதொடர்பான கோப்புகளை மத்திய அரசு ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்று தெரியவில்லை. ஒரு வேளை குறிப்பிட்ட விலைக்குள் கட்டமைக்க முடியாத நிலை இருக்கலாம். ஆனால் இத்தகைய விமானங்களை கட்டமைக்கும் திறமை நம்மிடம் உண்டு என்பதை மறுக்க முடியாது என்று கூறியுள்ளார் டி.எஸ். ராஜு.
3 வாரங்களுக்கு முன்புதான் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.