‘ஆண்மையற்றவர்’ என்ற மோடி குறித்தான சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராகுல் கண்டனம்
உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், '2002'ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர். வலிமையானவராக இருந்திருந்தால் நிச்சயம் கலவரத்தை தடுத்து இருப்பார்' என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
பாஜக பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள மோடி குறித்து இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர்கள் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பேசுவதை சோனியாகாந்தி ஏற்றுக் கொள்கிறாரா? இந்த வெட்கக்கேடான வார்த்தையை கூறியதற்காக சல்மான்குர்ஷித் மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
ஆனால், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரப் போவதில்லை என தெரிவித்தார் சல்மான் குர்ஷித். மேலும், நரேந்திரமோடியை 'ஆண்மை அற்றவர்' என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. குஜராத் கலவரம் தொடர்பாக அவரை விமர்சிக்க எனக்கு வேறு பொருத்தமான வார்த்தை கிடைக்கவில்லை.
நான் அவரது டாக்டர் இல்லை. அதனால், அவரை உடல்ரீதியாக பரிசோதிக்க முடியாது. எனவே, அவர் உடல்ரீதியாக எப்படி இருக்கிறார் என்று கூறுவது என் வேலை அல்ல. ஆனால், எதுவும் செய்யத் திறமையற்றவர்களை குறிப்பிட அரசியல் அகராதியில் 'ஆண்மையற்றவர்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
குஜராத் கலவர விவகாரத்தில், நரேந்திரமோடி உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒன்று, கலவரத்தின் பின்னணியில் இருந்ததாகவோ அல்லது கலவரத்தை தடுக்க முடியாத நிலையில் இருந்ததாகவோ அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஒன்று, 'நான் முற்றிலும் திறமையானவன், வலிமையானவன், திட்டமிட்டே கலவரம் நடத்தப்பட்டது' என்று கூறுங்கள். அல்லது, 'நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், கலவரத்தை ஒடுக்கும் வலிமை எனக்கு இருக்கவில்லை' என்று கூறுங்கள்.
கலவரத்தை ஒடுக்க இயலாதபட்சத்தில், அதை என்னவென்று கூறுவது? ஆண்மையின்மை என்று கூறக்கூடாதா? அதுதான் ஆண்மையின்மை என்றால், அதைத்தான் நான் கூறினேன். இதில் என்ன பிரச்சினை?
இதற்குப்போய் பாரதீய ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு அந்த வார்த்தை புரியவில்லை என்றால், நான் அவர்களுக்கு அகராதியை அனுப்பி வைக்கிறேன். அல்லது, வேறு பொருத்தமான வார்த்தை இருந்தால் சொல்லுங்கள், அதை பயன்படுத்துகிறேன்' எனக் கூறினார்.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தியும், சல்மான் குர்ஷித் கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். மேலும், சல்மான் குர்ஷித் இத்தகைய வார்த்தைகளாஇப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.