ராஜினாமா மிரட்டல்களை புறக்கணித்தார் ராகுல்- தருண் கோகோய்க்கு ஆதரவு!!
டெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு அமைச்சர் மற்றும் 32 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த போதும் கூட அம்மாநில முதல்வர் தருண் கோகோய்க்குத்தான் தமது ஆதரவு என்பதை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைய அக்கட்சி ஆளும் மகாராஷ்டிரா, அஸ்ஸாம், ஹரியானா மாநில முதல்வர்கள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இதனால் வெறுத்துப் போன ஆதரவாளர்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ராஜினாமா செய்த கையோடு ராகுலையும் விமர்சித்தனர். அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் ஒரு அமைச்சர் மற்றும் 32 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர்.
ஆனால் இதையெல்லாம் ராகுல் காந்தி கண்டுகொள்ளவில்லை போல.. இது உட்கட்சி விவகாரம் என்ற ஒற்றை வரியில் முடித்துக் கொண்டதோடு, என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை கட்சியினரிடத்தில் தெரிவித்துவிட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் மேற்கு வங்கத்திலும் ஜம்மு காஷ்மீரத்திலும் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுந்துள்ளது. விரைவில் சில மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி மேல் நெருக்கடி ஏற்பட்டிருப்பது அக்கட்சித் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.