அடேங்கப்பா.. லோக்சபாவையே ஒத்திவைக்கும் அளவுக்கு ராகுல் காந்தி பேசி எப்போவாவது பார்த்துள்ளீர்களா?
டெல்லி: இன்று காங்கிரஸ் வரலாற்றில் ஒரு பொன் நாள். தோற்றுவிடும் என்று தெரிந்தும், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர காங்கிரஸ் எதற்காக முனைந்ததோ, அதற்கான பலனை ஈட்டிய நாள் இது.
லோக்சபாவில் இன்று காங்கிரசின் யுவ சேனாதிபதி, தள கர்த்தரான ராகுல் காந்தி ஆற்றிய, ஆவேச உரை, சோர்ந்திருந்த அக்கட்சி தொண்டர்களை மட்டுமல்ல, "ஆஹா.. நாம நெனச்சத போல 2019 லோக்சபா தேர்தல் அவ்ளோ ஈஸி இல்ல போலயே" என்று பாஜகவினரையும் உணரச் செய்த, உசுப்பிவிட்ட உரை.
39 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி பெற்ற காங்கிரசால் அப்படி என்ன செய்துவிட முடியும் என்றுதான் அவைக்குள் பாஜக உறுப்பினர்கள் ஹாயாக அமர்ந்து இருந்தனர். ஆனால் ராகுல் காந்தி பேச ஆரம்பித்த மூன்றாவது நிமிடமே அவர்கள் ஆடித்தான் போய்விட்டனர். இருக்கையில் அவர்களால் அமர முடியவில்லை. ராகுல் காந்தியை பேச விடாமல் எழுந்து நின்று, கூச்சல் போடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் பாஜக எம்.பிக்கள்.
இதயத்தின் வார்த்தை
இதற்கு காரணம், ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் இந்திய சாமானியனின் இதயத்தில் இருந்த வார்த்தைகள். தங்களின் குரலாக ராகுலின் பேச்சை மக்கள் நினைத்தனர். உணர்ச்சிவசப்பட்டனர். இதனால்தான் லைவ் காட்சிகளை ஒளிபரப்பிய டிவி சேனல்களின் டிஆர்பி உச்சத்திற்கு எகிறியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என அத்தனை நியூஸ் சேனல்களும் ராகுல் காந்தியின் பேச்சை லைவ் செய்தன. ஏழை, எளியவர்களும், ஆங்கிலம் அதிகம் அறியாதவர்களும்தான் காங்கிரசின் வாக்கு வங்கி என்பதை அறிந்தவர் அல்வவா ராகுல்... எனவே திட்டமிட்டே அவர், ஹிந்தியில்தான் பேசினார். இதுதான் பாஜகவின் பதற்றத்திற்கும் காரணம்.
புள்ளி விவரத்தை அள்ளி வீசினார்
மக்களுக்கு 15 லட்சம் ரூபாயை தருவேன் என்றீர்களே, அந்த பணம் எங்கே? என ராகுல் காந்தி கேஷுவலாக ஆரம்பித்தபோதே, இன்று அவைக்குள் புயல் அடிக்கப்போகிறது என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டனர். "2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னீங்களே என்ன ஆச்சு? கடந்த ஓராண்டில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள்தான் உருவாகியிருக்கு. சீனா 24 மணி நேரத்திற்கு 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறது. நமது அரசு வெறும் 400 பேருக்குதான் தர முடிகிறது" என்று ரமணா விஜயகாந்த் பாணியில் புள்ளி விவரத்தோடு, அதே நேரம் இளைஞர்களின் ஏக்கத்தை தனது பேச்சில் வடித்தார் ராகுல் காந்தி.
சாமானியனின் குரல்
விவசாயிகள் வாங்கிய கடனை மோடி தள்ளுபடி செய்ய மாட்டாராம், தொழிலதிபர்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்வாராம். உலகம் எங்கும் பெட்ரோல், டீசல் விலை குறையுமாம், ஆனால் தொழிலதிபர் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புவதற்காக இந்தியாவில் மட்டும் பெட்ரோலிய பொருளின் விலை உயருமாம்.. என்னங்க சார் உங்க சட்டம்? என ராகுல் காந்தி கேட்டபோது, அவையில் இருந்த பிரதமர் மோடி அந்தபக்கமாக தனது முகத்தை திருப்பி கொண்டார். உரையை பார்த்த மக்களோ, "மகராசன்.. நமக்குள்ள இருக்குற சந்தேகத்தை அப்படியே கேட்குராறு பாரு" என்று வாய்க்குள் முனுமுனுத்தனர்.
பார்க்க வைத்த தந்திரம்
இதையும் கவனித்தார் ராகுல் காந்தி. பாருங்கள்.. இங்கே பாருங்கள்.. மோடியால் எனது கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அவர் முகத்தில் வலிந்து கொண்டுவரப்பட்ட சிரிப்பு இருக்கிறது. ஆனால், அவரிடம் நடுக்கத்தை என்னால் பார்க்க முடிகிறது. பிரதமரின் பொய்களால்தான் அவரால் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை என்று ராகுல் காந்தி கூறியதும், பிரதமருக்கு வேறு வழியே இல்லை. ராகுல் காந்தியின் மொத்த உரையின்போதும் மோடி ராகுல் காந்தியைத்தான் பார்க்க வேண்டியதாயிற்று. மீடியாக்களும், மொத்த நாடும் அதையேதான் செய்ய வேண்டியதாயிற்று.
மோடியையே குழப்பிவிட்டாரே
ராகுல் காந்தி உரையை துவக்கி ஆவேசம் காட்டியபோது, சிரித்தபடி அதை கடக்க முற்பட்டார் மோடி. ஆனால், ராகுலின் ஆவேசம் அதிகமானதும், வேறு பக்கம் திரும்பி பார்க்க முற்பட்டார். அதுவும் முடியாத நிலையில் இறுதியாக ராகுல் காந்தி உரைக்கு பாஜக எம்.பிக்கள் இடையூறு செய்ய பார்த்தனர். அவையை சில நிமிடங்கள் சபாநாயகர் ஒத்தி வைக்கும் நிலை உருவானது. ராகுல் காந்தி பேச்சால், அவை ஒத்தி வைக்கப்பட்டதே காங்கிரசுக்கு கிடைத்த வெற்றிதான். உரையின் இறுதியில் பிரதமரை கட்டியணைத்து நட்பு பாராட்டினார் ராகுல் காந்தி. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை மோடி. கைகுலுக்கி அனுப்பி வைத்தார். ராகுல் காந்தியின் பேச்சு, நடவடிக்கை அனைத்துமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டாகியுள்ளன. ஆனால் ஒரு விஷயத்தை மறந்துவிட வேண்டாம். பிரதமர் மோடி இதற்கெல்லாம் இன்று மாலை ஆற்ற உள்ள உரையில், வட்டியும், முதலுமாக பதில் கொடுக்க தயாராகிக்கொண்டுள்ளாராம்.