2019 லோக்சபா தேர்தல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி... விரைவில் கட்சித்தலைவராகிறார்
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை நவம்பர் மாதத்தில் ராகுல் காந்தி ஏற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை விரைவில் ராகுல்காந்தி ஏற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 லோக்சபா தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு 2019ஆம் ஆண்டில் அவரின் புதிய குழு, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் பங்கு வகிக்கும் என்றும் அதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கடந்த 2013ம் ஆண்டு ராகுல் காந்தி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் கடந்து விட்டன.
அமைச்சர் பதவியேற்க மறுப்பு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அவர் அமைச்சர் பொறுப்புபேற்க பல முறை அப்போது பிரதமராக இருந்து மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார். ஆனால் சாதாரண தொண்டனாக இருந்து கட்சியை வலுப்படுத்தப்போவதாக ராகுல் அவற்றை மறுத்துவிட்டார்.
தொடர் தோல்விகள்
2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் பல இடங்களில் தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் கட்சி தலைமை பொறுப்பு ஏற்பதை தள்ளி போட்டு வந்தார்.
பிரதமர் வேட்பாளர்
அண்மையில் அமெரிக்கா பயணம் சென்ற ராகுல் காந்தி, அங்கு ஒரு கூட்டத்தில் பேசிய போது, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார் என அறிவித்தார். இதை தொடர்ந்து வரும் நவம்பர் மாதத்தில் டெல்லியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் ஏற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் 132 வருட வரலாற்றில், 19 ஆண்டுகள் தலைவராக இருந்த முதல் தலைவர் சோனியா காந்தி. இதன்மூலம் நீண்ட காலம் தலைவராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்
அன்னி பெசண்ட், சரோஜினி நாயுடு, இந்திரா காந்திக்கு பின்னர் இந்த பதவிவகித்த நான்காவது பெண்மணி என்ற பெருமையும் அவரையே சேரும். வயது மூப்பின் காரணமாக கட்சியை பலப்படுத்த சோனியாவால் முன்பு போல் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்ய முடிவதில்லை.
2019 லோக்சபா தேர்தல்
காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு 2019ஆம் ஆண்டில் அவரின் புதிய குழு, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் பங்கு வகிக்கும் என்றும் அதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலில் சோனியா காந்தி
ராகுல் தலைவரான பிறகும் அரசியலில் தொடர்ந்து இயங்குவார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் பணிக் குழுவின் உறுப்பினராகவும், நாடாளுமன்றக் குழுவின் காங்கிரஸ் தலைவராகவும் சோனியா காந்தி நீடிப்பார் என தெரிகிறது.