பிரதமர் செய்வதை சொல்வதில்லை..சொல்வதை செய்வதில்லை.. இந்தியாவுக்கு நினைவூட்டிய ஜேட்லிக்கு ராகுல் நன்றி
பிரதமர் செய்வதை சொல்வதில்லை, சொல்வதை செய்வதில்லை என்று இந்தியாவுக்கு நினைவூட்டிய அருண் ஜேட்லிக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் எப்போதும் செய்வதை சொல்ல மாட்டார், சொல்வதை செய்யமாட்டார் என்று நாட்டு மக்களுக்கு நினைவூட்டிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ராகுல் காந்தி நன்றி என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில், குஜராத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க பாகிஸ்தானுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் சதி செய்தனர் என்று குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் மோடியின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சி பெரும் புயலை கிளப்பியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியது.
மாநிலங்களவையில் புதன்கிழமை மத்திய நிதி அமைச்சர் ஜேட்லி பேசுகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்டு பற்று குறித்து இதுவரை பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியதில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்ளிட்டோரின் நாட்டு பற்று குறித்து மோடி தனது உரைகளில் நேரடியாகவோ அல்லது அந்த அர்த்தம் கொள்ளும்படியாகவோ கேள்வி எழுப்பியதில்லை.
Dear Mr Jaitlie - thank you for reminding India that our PM never means what he says or says what he means. #BJPLies pic.twitter.com/I7n1f07GaX
— Office of RG (@OfficeOfRG) December 27, 2017
எங்களை பொருத்தவரை அது தவறானதாகும். இந்த தலைவர்கள் மீதும், அவர்கள் நாட்டுக்கு செய்த பங்களிப்பு மீதும் எங்களுக்கு அதிக மதிப்பு உண்டு என்றார் அவர். இதையடுத்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில், அன்புக்குரிய ஜேட்லி நமது பிரதமர் எப்போதும் செய்வதை சொல்ல மாட்டார், சொல்வதை செய்யமாட்டார் என்று நாட்டு மக்களுக்கு நினைவூட்டியதற்கு நன்றி என்று கூறியுள்ளார் ராகுல்.
மேலும் தனது டுவிட்டரில் பிரதமர் பேசிய பாகிஸ்தான் சதி தொடர்பான பேச்சுகள் அடங்கிய வீடியோவையும் ராகுல் இணைத்துள்ளார்.