வயநாடு தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசம்.. புதிய வரலாறு படைத்தார் ராகுல் காந்தி
Recommended Video
வயநாடு: கேரளாவில் உள்ள வயநாடு பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்.
ராகுல் காந்தி குடும்பத்தினரின் ஆஸ்தான தொகுதியாக உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி பாராளுமன்றத் தொகுதி கருதப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் இத்தொகுதியின் எம்பி.,யாக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளார்.
இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு ராகுல்காந்தி முடிவு செய்து மனுதாக்கல் செய்தார். அதேநேரத்தில், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிட மனு செய்தார். அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிபி.சுனீர் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள பாரத் தர்ம ஜன சேனா அமைப்பை சேர்ந்த துஷார் வெல்லப்பள்ளி ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் ராகுல் காந்தி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எதிரணி வேட்பாளர்களைவிட வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதுவரை, மலப்புரம் தொகுதி எம்பி.,யும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான இ. அகமது கேரளாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சாதனையை வைத்திருந்தார். அவர், 1,94,739 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில், அகமதுவின் சாதனையை ராகுல் காந்தி முறியடித்துள்ளார். இந்த சாதனை வெற்றியை கொண்டாட முடியாத மனநிலையில், ராகுல் காந்தியும், காங்கிரஸ் தொண்டர்களும் உள்ளனர். பாஜக தனிப்பெரும்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், அமேதி தொகுதியிலும் ராகுலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தனது குடும்பத்தாரின் ஆஸ்தான தொகுதியான அமேதியில், ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி ராணி ராகுலுக்கு கடுமையான போட்டியை கொடுத்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி, ஸ்மிருதி ராணி 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இது காந்தி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமேதி தொகுதியில் தோல்வி பயம் காரணமாகவே, வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று பாஜகவினர் தேர்தலின்போது விமர்சனம் செய்து வந்தனர். அந்த விமர்சனத்தை ராகுலும், காங்கிரஸ் கட்சியினரும் மறுத்து வந்தனர்.
மேலும், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அமேதி தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினமா செய்வார் என்றும், அங்கு தனது சகோதரி பிரியங்காவை அவர் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் காங்கிரஸார் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால், பாஜகவினர் கூறியது போலவே, அமேதி தொகுதியில் ராகுலுக்கு பின்னடவு ஏற்பட்டுள்ளது.