பாபர் மசூதி இடிப்புக்குப் பின் அயோத்தி மண்ணில் கால் வைத்த நேரு குடும்ப வாரிசு ராகுல்!
அயோத்தி: பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தான் அயோத்தி மண்ணில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார்.
1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அயோத்தி பக்கம் தலைவைத்து படுக்கவில்லை.
அயோத்திக்கு மிக அருகே உள்ள பைசாபாத்தில் பேரணி நடத்திய சோனியாவும், அயோத்தி செல்லவில்லை. பல முறை அயோத்திக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்ட வருண் காந்தியும் பல காரணங்களால் அதனை தவிர்த்துவிட்டார்.
தற்போது உத்தரப்பிரதேசத்தில் 2,500 கி.மீ மகா யாத்திரையை நடத்தி வருகிறார் ராகுல். அவர் இந்த யாத்திரையின் ஒருபகுதியாக இன்று அயோத்திக்கு சென்றார்.
அயோத்தியில் உள்ள அனுமன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது சர்ச்சைக்குரிய ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி அமைந்து உள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் சர்ச்சைக்குரிய எந்த பகுதிக்கும் அவர் செல்லவில்லை.
அயோத்தி மக்கள் ராகுல் காந்தியை பார்க்க திரண்டு இருந்தனர். கடந்த 1990-ல் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ்காந்தி உத்தரப்பிரதேசத்தில் யாத்திரை ஒன்றை மேற்கொண்டார். அப்போது அனுமன் கார்கி கோவிலுக்கு செல்வதாக இருந்து. ஆனால் கடைசி நேரத்தில் நேரம் இல்லாத காரணத்தினால் அந்த பயணம் ரத்துசெய்யப்பட்டது.