போதைப் பொருளுடன் அமெரிக்காவில் கைதான ராகுலை வாஜ்பாய் தான் விடுவித்தார்: சு. சாமி
ஜோத்பூர்: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் போதைப் பொருள் வைத்து எப்.பி.ஐ.இடம் சிக்கியதாகவும் அவரை அப்போதைய பிரதமர் வாஜ்பாயி தான் காப்பாற்றினார் என்றும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி. பிறரை குற்றம் கூறும் முன்பு தங்கள் நிலையை முதலில் பார்க்குமாறு அவர் காங்கிரஸுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சாமி தெரிவித்ததாக இந்தி நாளிதழ் ஒன்றில் வந்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2001ம் ஆண்டு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 1.60 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்து அமெரிக்காவில் எப்.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கினார். உடனே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு போன் செய்து ராகுலை விடுவிக்க உதவுமாறு கேட்டார். வாஜ்பாயும் அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு போன் செய்து ராகுலை விடுவிக்க வைத்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமி ராஜே பற்றி கூறுகையில்,
எனக்கு வசுந்தராவை நன்கு தெரியும். அவர் ஜான்சி ராணி. எந்த சர்ச்சையில் இருந்தும் வெளிவரக்கூடிய சக்தி உள்ளவர். அவர் தன்னை தானே பாதுகாத்துக் கொள்வார். அவருக்கு கட்சியினரின் உதவி தேவை இல்லை என்றார்.