புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்.. மீண்டும் பலமோடு வருவார் ராகுல்காந்தி: அந்தோணி கூறுகிறார்
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி பலத்துடன் திரும்புவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி, திடீரென, அரசியலுக்கு 2 வாரம் விடுமுறை போட்டுள்ளார். தற்போது அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் எதுவும் தெரியாத நிலையில், அவர் விரைவில் கட்சிப்பணிகளுக்கு திரும்புவார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி, திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, ‘ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்பதற்காக விடுமுறைக்குப்பின் அதிக பலத்துடன் வருவார். அவரது தற்போதைய விடுமுறை தற்காலிகமானது தான். ராகுல் காந்தியால் கட்சியை வலுப்படுத்த முடியும். சோனியா மற்றும் ராகுல் ஆகியோரின் தலைமையின் கீழ் கட்சி மீண்டும் புத்துணர்ச்சி பெறும்' என்றார்.
அதிக நாட்களாக ஓய்வின்றி உழைத்ததால், ராகுல்காந்தி ஓய்வு எடுத்துள்ளார் என்றும் அந்தோணி கூறினார்.