என்னாது பாஜகவுடன் கூட்டணியா?... ராகுல் ஒரு கோமாளினு ஊருக்கே தெரியுமே.. தெலுங்கானா முதல்வர் தாக்கு
ஹைதராபாத்: பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சிப்பதாலேயே ஆட்சியை கலைத்து விட்டோம் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அவர் ஒரு கோமாளி என்பது ஊருக்கே தெரியும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சி அமைத்து வந்தது. இந்நிலையில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது. இந்த ஆட்சியின் காலம் வரும் 2019-ஆம் ஆண்டு வரை உள்ளது.
எனினும் நேற்று கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டசபையை கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் அளித்தார். தேர்தல் முடியும் வரை பொறுப்பு முதல்வராக செயல்படுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
தேவையான நிதி
முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்காக கலைக்கப்பட்ட சட்டசபைக்கு தேர்தல் நடத்த இன்னும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. எனினும் அதற்கான வேட்பாளர்கள் பட்டியலை அவர் அறிவித்தார். இந்நிலையில் கடந்த மாதம் 6-ஆம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை கோரினார்.
தெலுங்கானா
ஆனால் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காகவே ஆட்சி கலைக்கப்பட்டதாக அரசியல் நோக்காளர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. இதுகுறித்து சந்திரசேகர ராவ் கூறுகையில் தெலுங்கானா மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் மிகப் பெரிய எதிரி.
கூட்டணி
இதனால் அடிப்படை ஆதாரமற்ற, அர்த்தமற்ற, நடைமுறைக்கு ஒவ்வாத குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவருகின்றனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 100 சதவீதம் மதச்சார்பற்ற கட்சியாகும். அப்படியிருக்கையில் மதவாத கட்சியான பாஜகவுடன் நாங்கள் எவ்வாறு கூட்டணி வைப்போம்?
நாட்டுக்கே தெரியும்
காங்கிரஸ் கட்சியினர் களத்தில் இறங்கி தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவர் என்பது தெரியவரும். நாட்டிலேயே மிகப் பெரிய கோமாளி என்றால் அது ராகுல்காந்தி என்பது இந்த நாட்டுக்கே தெரியும்.
டெல்லிக்கு அடிமை அல்ல
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டி அணைத்ததும் கண் அடித்ததும் அனைவரும் அறிந்த ஒன்றே. ராகுல்காந்தி தெலுங்கானாவுக்கு வந்து பிரசாரம் செய்தால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். காங்கிரஸ் என்ற சுல்தானின் இளவரசராக ராகுல் காந்தி இருந்துவருகிறார். அதனால்தான் கூறுகிறேன். இனிவரும் காலங்களில் தெலங்கானாவைச் சேர்ந்த மக்கள் யாரும் டெல்லிக்கு அடிமையாக இருக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார். காங்கிரஸ்- பாஜக அல்லாத 3-ஆவது கூட்டணிக்கு சந்திரசேகரராவ், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களிடம் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.