எனக்கும் மகன் போன்றவர்தான்... ராகுல் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை- சுமித்ரா மகாஜன்
ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். எனவே மகன் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
Recommended Video
டெல்லி: ராகுல்காந்தி எனக்கும் மகன் போன்றவர்தான். எனவே அவர் தவறு செய்தால் அதை கண்டிப்பது தாயின் கடமை என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு ராஷ்ட்ரீய கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது நேற்றைய தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேச வேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.
பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை சிறிது நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்று மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார். மோடியும் ராகுலை தட்டிக் கொடுத்தார்.
பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, மோடியை பார்த்து கண்ணடித்தார். இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், ராகுல் காந்தியின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென மரியாதை உண்டு.
அவர் வெறும் நரேந்திரமோடி அல்ல, நாட்டின் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை.
அதிலும் குறிப்பாக ராகுல் காந்தி அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. சபையின் மாண்பைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ராகுல் காந்தி எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக்கேட்டு, அவர்களை மெருகேற்ற வேண்டியது தாயின் கடமையாகும். அந்த முறையில் அவரை நான் கண்டிக்கிறேன்' என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.