பீகார் வெற்றிக்கு ராகுல் காந்திதான் காரணம்.. சந்தில் சிந்து பாடும் காங்கிரஸ்!
டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம், மாபெரும் கூட்டணிதான். அந்தக் கூட்டணியை உருவாக்கிய ராகுல் காந்திதான் இந்த வெற்றிக்கும் காரணம் என்று காங்கிரஸ் கட்சி, பீகார் வெற்றிக்கு ராகுல் காந்திக்கு உரி்மை கொண்டாடியுள்ளது.
தேர்தலுக்கும், ராகுல் காந்திக்கும் ராசியே கிடையாது என்று பலரும் கூறி வரும் நிலையில் பீகார் வெற்றிக்குக் காரணே ராகுல் காந்தி தான் என்று அடித்துக் கூறியுள்ள காங்கிரஸின் செயல், சந்தில் சிந்து பாடுவது போல உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் நிருபம் கருத்து தெரிவிக்கையில், நிதீஷ் குமார் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைய ராகுல் காந்திதான் நடவடிக்கை எடுத்தார். அவர்தான் இந்தக் கூட்டணியை உருவாக்கினார்.
பீகார் வெற்றிக்கு முதல்வர் நிதீஷ் குமார் காரணமாக இருந்தாலும் கூட, கூட்டணியை உருவாக்கிய பெருமை ராகுல் காந்தியையே சாரும் என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில் ராகுல் காந்திதான், நிதீஷ் குமாரையும், லாலு பிரசாத் யாதவையும் இணைத்து வைத்தார். அவர்தான் தேர்தலில் தொகுதிப் பங்கீடு ஏற்படவும் காரணமாக இருந்தார் என்றார்.
லோக்சபா தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எங்குமே பெரிய வெற்றி கிடைக்காமல் இருந்து வந்தது. தற்போது பீகாரில்தான் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் கூட நிதீஷ் புண்ணியத்தால் கிடைத்ததுதான். ஆனால் ராகுல் காந்தியை இதற்கு சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டது காங்கிரஸ்.
அடுத்து, ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர வைக்க இதுவே சரியான தருணம் என்ற குரல்களும் கேட்டாலும் கேட்கலாம்.