ராகுலின் லீவு முடிகிறது... 19ம் தேதி ரிட்டர்ன்... விவசாயிகள் பேரணியில் பங்கேற்கிறார்!
டெல்லி: அரசியலில் இருந்து விடுமுறை எடுத்துச் சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள விவசாயிகள் பேரணியில் பங்கேற்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அரசியல் பணிகளில் இருந்து விடுமுறை எடுத்து ஓய்வு எடுக்கப் புறப்பட்டார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. ஆனால், அவரின் இருப்பிடம் குறித்த விபரங்களை வெளியிட காங்கிரஸ் மறுத்து விட்டது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
ஆனபோதும், ராகுல் எங்கே இருக்கிறார், எப்போது அரசியலுக்கு திரும்புவார் என்பது குறித்து தொடர்ந்து காங்கிரஸ் மௌனம் சாதித்து வந்தது. இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் உட்பட விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 19ம் தேதி டெல்லியில் பேரணி மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்பேரணியில் ராகுல் பங்கேற்பார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவரது விடுமுறை முடிவுக்கு வருகிறது.
இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பேசினார். அப்போது அவர், ‘19ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உரையாற்றுவார்' என்றார்.