தீபாவளிக்கு பிறகு காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி?
தீபாவளி பண்டிகைக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கக் கூடும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவரால் மட்டுமே காங்கிரஸை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் பகிரங்கமாக தெரிவித்து வந்தனர்.
புதிய தலைவர்
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், காங்கிரஸில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு பிறகு, கட்சியின் புதிய தலைவர் பொறுப்பேற்றுக் கொள்வார்.
பொதுவான கருத்து
கட்சியில் மூத்தவர்களும், இளையவர்களும் இருக்க வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்பார். ராகுல் காந்தி தலைவர் பதவி ஏற்க இதுதான் சரியான தருணம். ராகுல் காந்தி அப்பதவியை ஏற்க வேண்டும் என்பது எங்களது பொதுவான கருத்தாகும்.
தீவிர அரசியல் குறித்து பிரியங்காதான் முடிவு
துணை தலைவராக இருந்து வரும் ராகுல் கட்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா மாட்டாரா என்பதை அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்.
தகுதியின் அடிப்படையில் பொறுப்பு
நேரு குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டும் ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்கமாட்டார். அதற்கான தகுதியின் அடிப்படையில்தான் அவர் அப்பொறுப்பை ஏற்பார் என்றார் சச்சின் பைலட்.