ஷீனா போரா வழக்கு... முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் பீட்டர் முகர்ஜியின் மகன்
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜி. சி.பி.ஐ.-யிடம் கொடுத்துள்ளார்
மும்பையை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இதற்கு உடந்தையாக இருந்த அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ஷாம் ராய் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 19-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் திடீர் திருப்பமாக பீட்டர் முகர்ஜியையும் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பீட்டர் முகர்ஜியின் மகனும், ஷீனா போராவின் காதலனுமான ராகுலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சி.பி.ஐ.யை சேர்ந்த சில உயர் அதிகாரிகள் ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ராகுல் முகர்ஜி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மும்பையில் 3 படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி வீட்டை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் நான் உனது தங்கை இல்லை மகள் என்று வெளியில் சொல்லிவிடுவேன் என்று இந்திராணியை ஷீனா போரா மிரட்டியதற்கான ஆதாரங்களை ராகுல் சி.பி.ஐ. யிடம் கொடுத்துள்ளதாகவும், இவை இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக இருக்கும் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.