ராகுல் நடத்திய சர்வேயிலும் படுதோல்வி! காங்.க்கு 85 முதல் 92 இடங்கள்தான் கிடைக்குமாம்!!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமது கட்சியினரைக் கொண்டு நாடு முழுவதும் நடத்திய கருத்து கணிப்பிலும் காங்கிரஸ் படுதோல்வியைத்தான் சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் நாளை தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே தொண்டர்களை ஆறுதல்படுத்தும் வகையிலான உரை ஒன்றை ராகுல் தரப்பு தீவிரமாக தயாரித்துக் கொண்டிருக்கிறதாம்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.
இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட ஒரு முறையில் கருத்து கணிப்பு ஒன்றை நட்டத்தியுள்ளார்.
1500 தொண்டர்கள்
இக்கருத்து கணிப்பு 1500 காங்கிரஸ் தொண்டர் படையை வைத்து நாடு முழுவதும் நடத்தப்பட்டிருக்கிறது.
85 முதல் 92 இடம்தான்..
இதன் முடிவுகள் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 100க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்குமாம். அதாவது 85 முதல் 92 இடங்கள்தான் காங்கிரஸுக்கு கிடைக்கும்.
பாஜகவுக்கு 225 -230
ராகுல் நடத்திய சர்வே முடிவில் பாரதிய ஜனதா அணிக்கு 225 முதல் 230 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
தோல்வியை ஒப்புக்கொள்கிறார்
இதனைத் தொடர்ந்து நாளை அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் போது தோல்வியை ஏற்றுக் கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ராகுல் பேச இருக்கிறாராம்.
ஆறுதல் அறிக்கை தயாரிப்பு
இதற்காக தொண்டர்களை ஆறுதல்படுத்தக் கூடிய வகையிலான வாசகங்களுடன் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறதாம். இந்த அறிக்கையை ராஜிவ் காந்தி கல்வியியல் நிறுவனத்தின் இயக்குநர் மோகன் கோபால், சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர் இணைந்து தயாரித்து வருகின்றனராம்.
யுத்தம் தொடர்கிறது
இந்த அறிக்கையில், போர்க்களத்தைத்தான் நாம் இழந்திருக்கிறோம்..யுத்தம் இன்னும் தொடர்கிறது என்பது போன்ற டச்சிங்கான வசனங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.