லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா.. மருத்துவமனையில் சோனியா கண்ணீர்- ராகுல் காந்தி தகவல்
மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், ஏழைகளின் பசியை உணர்ந்ததால் தான் சோனியா, உணவு பாதுகாப்பு மசோதாவை பல போராட்டங்களுக்குப் பின் நிறைவேற்றினார்.
மத்திய பிரதேசத்தில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக, பாஜக தலைமையிலான சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் தேர்தலுக்குப் பின் இந்த நிலை மாறும்.
காங்கிரஸ் கட்சி மட்டுமே, ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. ஏழை மக்களின் பசியை உணர்ந்ததால் தான், மத்திய அரசின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26ம் தேதி லோக்சபாவில் இந்த மசோதா மீதான ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது என் தாய் சோனியாவின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. அவரால் உட்காரக் கூட முடியவில்லை. ஏழைகளின் பசியை போக்கும், தன் கனவு திட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்காமல் லோக்சபாவில் இருந்து, மருத்துவமனைக்கு வரமாட்டேன் என அவர் மறுத்தார்.
கடைசியில் மிக மோசமான நிலையில் தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின், தன் கனவு திட்டம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்த சோனியா, அதில் தன்னால் ஓட்டளிக்க முடியாததை நினைத்து கண்ணீர் விட்டார்.
உண்மையான வளர்ச்சி என்றால் என்னவென்றே பாஜகவுக்குத் தெரியாது. வெறும் ரோடு போடுவது மட்டும் வளர்ச்சி அல்ல. அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாக மரியாதையுடன் நடத்துவதே உண்மையான வளர்ச்சி என்றார்.