சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து ரஞ்சித் சின்கா விரைவில் டிஸ்மிஸ்?
டெல்லி: ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்களை தனது வீட்டில் சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதால் சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து ரஞ்சித் சின்காவை நீக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா, ஸ்பெக்டரம் ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஆகிய வழக்குகளில் தொடர்புடைய சிலரை தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை பொதுவாக சி.பி.ஐ. இயக்குநர் தனது அலுவலகத்தில் அதே வழக்கை விசாரித்து வரும் மற்ற அதிகாரிகளின் முன்னிலையில் சந்தித்து பேசவேண்டும் என்பது சட்ட விதியாகும்.
பூஷன் புகார்
இந்த விதிமுறையை மீறி ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்களை அவர் சந்தித்து பேசியதாக மூத்த வழக்கறிஞரும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு குறித்த பொது நல வழக்கில் ஆஜராகி வருபவருமான பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டினார்.
சர்ச்சை நபர்களுடன் சந்திப்பு
ரஞ்சித் சின்காவின் வீட்டின் உள்ள பதிவேடுகளின் மூலம் இந்த உண்மை தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் ஹவாலா மோசடி வழக்கில் தொடர்புடைய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியையும் அவர் தனது வீட்டில் சந்தித்து பேசியதாக புகார் கூறப்பட்டது.
பதவி நீக்க கோரி மோடிக்கு கடிதம்
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த்பூஷன் பிரமாண பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்தார். மேலும், ரஞ்சித் சின்காவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் எழுதினார்.
பூஷன் மீது சிபிஐ வழக்கு
பிரசாந்த்பூஷண், உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்து உள்ளதாகவும், எனவே அவர் மீது வழக்கு தொடர அனுமதிக்கவேண்டும் எனவும் சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது.
சின்கா நீக்கம்?
இந்த நிலையில் பிரசாந்த்பூஷன் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே ரஞ்சித் சின்கா சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ராகுல் ஆதரவாளர்
கடந்த ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஞ்சின் சின்காவை சிபிஐ இயக்குநராக நியமித்ததில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.