குஜராத்தில் காங்கிரஸுக்கு கை கொடுத்த 'ராகுல் காந்தி'யின் கோவில் விஜயம்!
குஜராத்தில் ராகுல் காந்தி கையிலெத்த கோவில் விஜயம் வியூகம் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
அகமதாபாத்: குஜராத்தில் ராகுல் காந்தி தடாலடியாக கையில் எடுத்த கோவில்கள் விஜயமானது காங்கிரஸுக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. ராகுல் காந்தி வழிபாடு செய்த கோவில்கள் இருக்கும் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.
குஜராத்தில் பாஜகவும் பிரதமர் மோடியும் இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் விதமாக தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ராகுல் காந்தி திடீரென குஜராத்தின் முக்கிய கோவில்களுக்கு போய் வழிபாடு நடத்தினார்.
இதுவும் கூட தேர்தல் களத்தில் முக்கிய பிரச்சனையாக விவாதிக்கப்பட்டது. தமது குடும்பமே சிவபக்தர்கள்தான் என ராகுல் காந்தி பதிலடி கொடுத்திருந்தார்.
ஜகந்நாதர் ஆலயம்
துவாரகையில் செப்டம்பர் 25-ந் தேதி பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி அகமதாபாத்தின் ஜகந்நாதர் ஆலயம் அமைந்திருக்கும் ஜமல்பூர் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். ராகுல் காந்தி தமது பிரசாரத்தில் 27 கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
ஜமால்பூர் தொகுதி
இந்த 27 கோவில்கள் அமைந்திருக்கும் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் இப்போது வென்றுள்ளது. துவாரகை பாஜகவின் கோட்டை. அத்தொகுதி தற்போதும் பாஜக வசமே உள்ளது., ஆனால் ஜமால்பூர் தொகுதியை பாஜகவிடம் இருந்து தட்டிப் பறித்தது காங்கிரஸ். இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.
காத்டா தொகுதி
அக்ஷர்தாம் கோவில் இருக்கும் காந்திநகர் வடக்கு தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது. மற்றொரு கோவில் நகரமான காத்டாவில் காங்கிரஸ் வேட்பாளர் பர்வீன் மாரு அமைச்சராக இருந்த அத்மரம் பார்மரை 9,400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அல்பேஷ் தாகுர்
இதேபோல் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பாஜகவின் நரேன் படேலை காங்கிரஸின் ஆஷாபென் படேல் உன்ஜாவில் வீழ்த்தினார். இங்குதான் பட்டேல்களின் புனித தலம் இருக்கிறது. கோடியார் ஆலயம் இருக்கும் ரதன்பூரில் காங்கிரஸ் வேட்பாளரான அல்பேஷ் தாகுர் தாகூர் அமோக வெற்றி பெற்றார். ராகுல் காந்தி கோவில் வழிபாடு நடத்தியதில் 18 தொகுதிகள் காங்கிரஸ் வசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது,