ம.பி.யில் தடையை உடைத்து டூவிலரில் சென்ற ராகுல்- கைதாகி விடுவிப்பு!
மத்திய பிரதேசத்தில் போலீசார் தடையை உடைத்து துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தைப் பார்வையிட இருசக்கர வாகனத்தில் சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
மான்ட்சார்: மத்திய பிரதேசம் மான்ட்சாரில் 6 விவசாயிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தைப் பார்வையிட போலீசார் தடையை மீறி மோட்டார் சைக்கிளில் செல்ல் முயன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் சில மணிநேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான மான்ட்சார் என்ற இடத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இத்துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் பலியாகினர். இந்த படுகொலையைக் கண்டித்து மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது.
இதனிடையே மான்ட்சாருக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சென்றார். அங்கு துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தைப் பார்வையிட புறப்பட்டார் ராகுல்.
ஆனால் போலீசார் ராகுலுக்கு அனுமதி அளிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து போலீசாருடன் ராகுல் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் போலீசார் தடையை மீறி ராகுல் செல்ல முயன்றார். ராகுல் சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் ஓடிப் போய் தடுக்க, ராகுலின் பாதுகாவலர்கள் போலீஸை மறிக்க அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ராகுலின் மோட்டார் சக்கரத்தை வழிமறித்து அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
சில மணிநேரம் ராகுல் காந்தி தடுத்து வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.