ராஜஸ்தான் முதல்வர் தேர்வு.. குழப்பம் தீர்ந்தது.. மாலை 4 மணிக்கு அறிவிப்பு!
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
Recommended Video
ஜெய்ப்பூர்: இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் குறித்த அறிவிப்பு மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஆட்சி புரிந்த வசுந்தரா ராஜேவின் பாஜக பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில் 99 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 73 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், 19 தொகுதிகளில் மற்ற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சைகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களே தேவை.
பெரிய குழப்பம்
இந்த நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. இவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவும் நிறையவே இருந்தது.
கூட்டம் நடந்தது
இதனால் நேற்று ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 70 சதவீதம் பேர் சச்சின் பைலட்டுதான் முதல்வராக வர வேண்டும் கூறினார். கணிசமான நபர்கள் அசோக் கெலாடிற்கு ஆதரவு அளித்தனர்.
ராகுல் முடிவு
கடைசியில் முதல்வரை தேர்வு செய்யப்போவது யார் என்ற முடிவு ராகுல் காந்தியிடம் விடப்பட்டது . மத்திய பிரதேசம் போலவே இங்கும், முதல்வரை ராகுல் காந்திதான் தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருவரும் சந்திப்பு
இதையடுத்து நேற்றே ராஜஸ்தான் முதல்வரை ராகுல் அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே நேற்று இரவு வரை கடும் போட்டி நிலவியது. இதனால் நேற்று இரவே அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இருவரையும் ராகுல் காந்தி அழைத்து பேசினார்.
இன்று அறிவிப்பு
இதையடுத்து ராஜஸ்தான் எம்எல்ஏக்களிடமும் அவர் பேசினார். இந்த நிலையில் இந்த சந்திப்புகளை தொடர்ந்து இன்று ராஜஸ்தான் முதல்வர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் சச்சின் பைலட், அசோக் கெலாட் சந்திப்பு நடத்தினார்கள். இதையடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வர் குறித்த அறிவிப்பு மாலை 4 மணிக்கு வெளியாகும். முதல்வர் யார் என்பதை ராகுல் காந்தி அறிவிப்பார் என்று கூறுகிறார்கள்.