அமேதி மீண்டும் ராகுலுக்கு.. ரேபரேலி பிரியங்காவுக்கு.. அப்போ சோனியாவுக்கு...?
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியிலிருந்தே மீண்டும் போட்டியிடுவார் என்றும் ரேபரேலி தொகுதியிலிருந்து பிரியங்கா போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. சோனியா காந்தி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தெரிகிறது.
முன்பு ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதி அமேதி. அதேபோல இந்திரா காந்தி போட்டியிட்டு வந்த தொகுதி ரேபரேலி. பின்னர் அமேதிக்கு ராகுல் மாறினார். ரேபரேலியை சோனியா எடுத்துக் கொண்டார். இந்த இருவரும் இந்தத் தொகுதிகளில்தான் போட்டியிட்டு வந்தனர்.
கடந்த தேர்தலிலும் கூட அமேதியில் ராகுலும், ரேபரேலியில் சோனியாவும் போட்டியிட்டனர். ஆனால் வரும் தேர்தலில் சோனியா போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.
சுகவீனம்
சோனியா காந்தி உடல் சுகவீனமாக உள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். முன்பு போல தீவிரமான அரசியலில் அவர் ஈடுபடுவதில்லை. இதன் காரணமாகவே கட்சித் தலைவர் பதவியை ராகுலிடம் அவர் கொடுத்து விட்டார்.
பிரதமர் வேட்பாளர்
ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். அதற்கு கூட்டணிக் கட்சிகளின் காங்கிரஸ் பெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக யார் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்ற பேச்சுக்கள் காங்கிரஸ் குடும்பத்தில் கிளம்பியுள்ளதாக தெரிகிறது.
அமேதியில் மீண்டும் ராகுல்
அதன் படி ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியிலேயே போட்டியிடுவார் என்று தெரிகிறது. வேறு தொகுதிக்கு இடம் மாற அமேதி வாக்காளர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே இங்கேயே ராகுல் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
ரேபரேலியில் பிரியங்கா
அதேசமயம் ரேபரேலி தொகுதியில் இந்த முறை சோனியா காந்தி போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. கடந்த 2004 முதல் இங்கு சோனியா காந்தி போட்டியிட்டு வென்று வருகிறார். ஆனால் இந்த முறை அவருக்குப் பதில் பிரியங்கா நிற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
சோனியா ஓய்வு
வரும் தேர்தலில் சோனியா காந்தி எந்தத் தொகுதியிலும் போட்டியிட மாட்டார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மாறாக அவர் தேர்தல் அரசியிலிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால் எதுவும் உறுதியான தகவல் இல்லை.
மாபெரும் கூட்டணிக்கு முயற்சி
மறுபக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான கூட்டணியை வரும் லோக்சபா தேர்தலுக்கு அமைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான தீவிர பேச்சுக்களிலும் அது இறங்கியுள்ளது.