இன்றுடன் 'லீவ்' முடிகிறது.. 'அரசியலுக்கு' மீண்டும் திரும்புகிறார் ராகுல்!!
டெல்லி: காங்கிரஸ் கட்சிப் பணிகளில் இருந்து துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்டிருந்த 2 வார விடுப்பு இன்றுடன் முடிவடைகிறது. எனினும், அவர் எப்போது அரசியல் பணிகளுக்கு திரும்புவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியபோது, கட்சிப் பணிகளில் இருந்து 2 வாரங்களுக்கு ராகுல் காந்தி விடுப்பில் சென்றார். அதன்பிறகு அவர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக இருந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தி 2 வாரங்கள் விடுப்பில் சென்றிருந்தார்; அவரது விடுப்பு, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுரஜ்வாலா கூறியிருந்தார்.
டெல்லி, குஜராத் உள்பட 5 மாநிலங்களுக்கு புதியத் தலைவர்கள் நியமிக்கப்பட்டது, ராகுல் காந்தியின் ஒப்புதலுடனேயே நடந்தது எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முலாயம் சிங் யாதவ் விரைவில் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய எனது வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார்.
இன்றுடன் ராகுலின் விடுப்பு காலம் முடிவடையும் நிலையில் அவர் எப்போது 'தீவிர' அரசியலுக்கு திரும்புவார் என்பது தெரிவிக்கப்படவில்லை.