பிராப்தம் இருந்தா கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.. ராகுல் காந்தி கலகல!
47 வயது பிரம்மச்சாரியான ராகுல்காந்தியிடம் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் எப்போது திருமணம் என்று கேட்டதற்கு ராகுல் கலகப்பான பதிலைக் கூறியுள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியிடம் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் எப்போது கல்யாணம் என்று சுவாரஸ்யமான கேள்வியைக் கேட்க அதற்கு ராகுல் கலகலப்பான பதிலைக் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பதிலளித்தார். அப்போது பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுல்காந்தியிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார். மக்கள் எப்போதும் ராகுலிடம் கேக் விரும்பும் கேள்வியைத் தான் நானும் உங்களிடம் தற்போது கேட்கப் போகிறேன் என்று விஜேந்தர் தனது கேள்வியைத் தொடங்கினார்.
47 வயதாகும் ராகுல் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார். ஒருவேளை பிரதமர் ஆன பின்பு தான் திருமணம் என்ற முடிவில் இருக்கிறீர்களா என்று விஜேந்தர் ராகுலிடம் கேட்டார்.
ராகுல்காந்தி பலபல பதில்
இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி எப்போது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது என் திருமணம் நடக்கும். நான் விதியின் மீது நம்பிக்கை இருப்பவன் என்று கூறினார். அடுத்ததாக விஜேந்தர் கேட்ட கேள்வி பிரதமரான பின்பு ராகுல்காந்தி விளையாட்டு பயிற்சிகள் செய்வாரா என்பது தான். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் விளையாட்டில் பங்கேற்பது என்பது அரிதான விஷயம் அப்படி இருக்கும் போது ராகுல் என்ன அணுகுமுறையை கையாள்வார் என்பதே அந்தக் கேள்வி
ராகுலின் ரகசியம்
நான் தினமும் உடற்பயிற்சி, நீச்சல் செய்கிறேன், ஏகிடோவில் பிளாக் பெல்ட்டும் வாங்கியுள்ளேன். ஆனால் நான் இவற்றை பொதுமேடைகளில் சொல்வது கிடையாது. இதே போன்று தினமும் ஒரு மணி நேரம் விளையாடுவேன். ஆனால் கடந்த 4 மாதங்களாக அதை செய்ய முடியவில்லை என்பதை ஒப்பு கொள்கிறேன் என்று ராகுல் தெரிவித்தார்.
ராகுல் உடற்பயிற்சி வீடியோ விரைவில்
அப்படியானால் ஏன் ராகுல் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதில்லை, அது பலருக்கு மன்மாதிரியாக இருக்குமே என்று விஜேந்தர் கேட்க அதற்கு சிரித்துக் கொண்டே இனி உடற்பயிற்சி வீடியோக்களை போடுகிறேன் என்று ராகுல் தெரிவித்தார்.
மக்களுக்கான அரசு
தொடர்ந்து பார்வையாளர்களின் இதர கேள்விகளுக்கு பதிலளித்த ராகுல்காந்தி கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் போது சில தவறுகள் செய்தவிட்டன. ஆனால் புதிய காங்கிரஸ் அரசு மக்களக்கான மத்திய அரசாக இருக்கும் என்றார். பாஜக அரசு பொருளாதாரத்தின் மார்பு மீது இரண்டு அம்புகளை எய்துவிட்டது. ஒன்று பணமதிப்பிழப்பு மற்றொன்று ஜிஎஸ்டி இவை இரண்டும் தற்போது அதன் தாக்கத்தை காட்டிக் கொண்டிருக்கின்றன என்றும் ராகுல் குறிப்பிட்டார்.