ஜனநாயத்திற்கு அச்சுறுத்தல் என கூறி இருப்பதை கவனிக்க வேண்டும்... ராகுல் காந்தி
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லி : ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி இருக்கும் கருத்து மிக முக்கியமானது. நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் சரிவர செயல்படவில்லை என்று நீதிபதிகள் செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் நாட்டிலேயே முதன்முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்தனர். நீதிபதிகளின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கட்சியின் மூத்த அரசியல்வாதிகளும் சட்ட வல்லுநர்களுமான கபில்சிபில், ப. சிதம்பரம், மனிஷ் திவாரி, சல்மான் குர்ஷித் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சர்ஜ்வாலா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வெகுண்டெழுந்து சொன்ன குற்றச்சாட்டுகள் கவலையை அளித்துள்ளது என்றார். நீதிபதிகளின் இந்த குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகளின் குற்றச்சாட்டு
குறிப்பாக நீதிபதிகள் இரண்டு விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ளனர் வழக்குகள் சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் சில வழக்குகள் பரிந்துரையின் பேரில் சில நீதிபதிகளின் அமர்வுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறியுள்ளனர் என்றார்.
தீர்வு காண வேண்டும்
இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, நீதிபதிகள் பிரச்னையை தீர்ப்பதில் அரசு தோற்றுவிட்டது. அரசு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.
கவனிக்கப்பட வேண்டும்
லோயா மரணம் குறித்தும் முறையாக விசாரிக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்.
இதுவரை நடக்காத விஷயம்
நீதித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரின் விருப்பமும். நாட்டில் இது போன்றதொரு சம்பவம் முன் எப்போதும் நடந்ததே இல்லை எனவே உச்சநீதிமன்றம் உயர்மட்ட குழுவை அமைத்து இந்த விவகாரத்தை சரியான முறையில் கையாள வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.