பாஜக சித்தாந்தத்தைத் தான் எதிர்கிறேன், ஒழிக்க நினைக்கவில்லை...ராகுல்காந்தி நிதான பேச்சு!
பாஜக இந்தியாவை விட்டே ஒழிய வேண்டும் என்று நினைக்கவில்லை, அவர்களின் சித்தாந்தத்தைத் தான் எதிர்க்கிறேன் என்று காங்கிரஸ் கட்சயின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வதோதரா : பாஜகவின் சித்தாந்தத்தைத் தான் எதிர்க்கிறேன், அவர்களை இந்தியாவில் இருந்தே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ராகுல்காந்தி அங்கு தொழில்முனைவோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது எங்களின் கண்களைத் திறந்து விட்டது, இதற்காக பாஜகவிற்குத் தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ், பாஜக இரண்டுமே இந்திய மக்களின் வெளிப்பாடுகள். நான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை தேர்ந்தெடுக்கிறேன்.
பாஜக சித்தாந்தத்துக்குதான் எதிர்ப்பு
நான் பாஜகவிற்கு எதிராகப் போராடுகிறேன். ஆனால் எப்போதுமே பாஜகவை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, அது மக்களின் எண்ண ஓட்டம்.
ராகுல் நன்றி
2014 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தான் எனது கண்களைத் திறந்தது. பாஜக என் மீது கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் நடத்தியது, ஆனால் இவை எல்லாம் எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக அமைந்துள்ளன.
பாஜக நிறைவேற்றியதா?
வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்ற காரணத்திற்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று சொன்ன பாஜகவின் உறுதி என்னவாயிற்று.
வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்
நாள்தோறும் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்கான சந்தையில் நுழைகின்றனர், ஆனால் ஒரு நாளைக்கு 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நாள்தோறும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தரவில்லை என்றால் மக்களின் கோபம் விஸ்வரூபம் எடுக்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.