பீமா கோரேகான் சம்பவத்தை முன்வைத்து எமெர்ஜென்சி நிலை உருவாக்கப்பட்டுள்ளது: அருந்ததி ராய் அச்சம்
டெல்லி: பீமா கோரேகான் சம்பவம் தொடர்பாக நடைபெறும் கைதுகளை, எமர்ஜென்சி காலத்துடன் ஒப்பிட்டுள்ளார், சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற பீமா கோரேகான் கலவர சம்பவம் தொடர்பாக புனே போலீஸார் 9 சமூக செயல்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடரும் ரெய்டு சம்பவங்கள் குறித்து எழுத்தாளர்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
நாடு எங்கே செல்கிறது
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அருந்ததி ராய் "வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமை ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகள் வீடுகளில் போலீஸ் ரெய்டுகள் நடந்துள்ளன. பட்டப்பகலில் மக்களை கூட்டாக சேர்ந்து கொலை செய்தவர்களை விட்டுவிட்டு, இவர்களை நோக்கி காவல்துறை திருப்பிவிடப்பட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது இந்தியா எங்கே சென்று கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
கொலையாளிகளுக்கு பாராட்டு
கொலையாளிகள் கவுரவிக்கப்பட்டு, பாராட்டுதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நீதிக்காக பேசுவோர் அல்லது இந்துத்துவாவுக்கு எதிராக பேசுவோர் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தான் இவையெல்லாம். இப்படி நடப்பதை அனுமதிக்க முடியாது.
நாம் அனைவரும் ஒன்றாக சேர வேண்டிய நேரமிது. அல்லது, நாம் பெற்றுள்ள, அனுபவித்துவரும் சுதந்திரங்களை ஒவ்வொன்றாய் இழக்க வேண்டி வரும். இப்போது நடப்பது ஏறத்தாள எமர்ஜென்சி காலத்திற்கு ஈடானது. இவ்வாறு அருந்ததி ராய் தெரிவித்தார்.
வரவர ராவ் கைது
இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ் ஹைதராபாத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். இதே போல பீமா கோரேகான் சம்பவம் தொடர்பாக பல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீமா கோரேகான் சம்பவம் பின்னணி
1817ம் ஆண்டு பிராமணிய பேஷ்வா ராணுவத்திற்கு எதிரான சண்டையில் இறந்த தலித்துக்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையிலான தலித்துக்கள் பீமா கோரேகானுக்கு செல்வர்கள். இந்த வருடம் சண்டையின் 200வது ஆண்டு நினைவு தினம் என்பதால் கடந்த ஜனவரி மாதம் 1ம்தேதி, பீமா கோரேகானில் உள்ள வெற்றித் தூண் பகுதியில், பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அஞ்சலி செலுத்தப்படுவதாக கூறி, மராட்டிய மற்றும் உயர் ஜாதி ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அஞ்சலி நிகழ்வின்போது கலவரம் வெடித்தது. இதன்பிறகு, புனே, மும்பை, அவுரங்காபாத் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கலவரம் பரவியது குறிப்பிடத்தக்கது.