சென்னை-பெங்களூர், மும்பை, மன்னார்குடி- ஜோத்பூர், நாகர்கோவில்- காச்சிகுடா புதிய ரயில்கள்
டெல்லி: லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பெங்களூர்- சென்னை, மும்பை- சென்னை இடையே புதிய ரயில் சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் அருணாசலப்பிரதேசம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு ரயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் கார்கே அறிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசி ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். அப்போது தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதி மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இந்த கடும் அமளிக்கு இடையே ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த கார்கே கூறியதாவது:
பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. நாடு முழுவதும் 72 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். இவற்ரில் 38 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 10 பயணிகள் ரயில்கள்.
சரக்கு ரயில்களுக்கான தனி பாதைகள் மூலம் செலவுகள் குறைந்துள்ளன. அதிவேக பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டியது அவசியம். வடகிழக்கு மாநிலங்களான மேகாலாயா மற்றும் அருணாச்சல்பிரதேசத்துக்கு ரயில் சேவை தொடங்கப்படும்.
நாடு முழுவதும் 4,556 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணதேவி கோயில் மற்றும் கட்ராவுக்கும் விரைவில் ரயில் சேவை இயக்கப்படும். நாடு முழுவதும் 2758 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய ரயில் சேவைகள் எவை எவை?
அத்துடன் மும்பை- சென்னை, நாகர்கோவில்- காச்சிகுடா இடையே வாராந்திர ரயில் சேவைகள், நாகர்கோயிலில் இருந்து கரூர்- நாமக்கல்- சேலம் வழியாக காச்சிகுடாவுக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, மன்னார்குடி- மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில், திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படும்.
மேலும் மன்னார்குடி- ஜோத்பூர் இடையே வாராந்திர ரயில் சேவை, திருவனந்தபுரத்தில் இருந்து ஈரோடு, திருப்பத்தூர் வழியே பெங்களூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, பெங்களூர்- சென்னை இடையே தினசரி ரயில் இயக்கப்படும்.
இவ்வாறு ரயில்வே பட்ஜெட்டில் கார்கே அறிவித்தார்.
ரயில்வே பட்ஜெட் தாக்கலின் போது அமளி தொடரவே 15 நிமிடத்திலேயே உரையை முடித்துக் கொண்டார் கார்கே. இதன் பின்னர் லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
மன்னார்குடியிலிருந்து ஜோத்பூருக்கு...
மன்னார்குடியைப் பொறுத்தவரை மாமல்லபுரம் போல மிகப் பெரிய சுற்றுல்லாதலம் அல்ல. ஆனாலும் இங்கிருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு வாராந்திர ரயில் சேவை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் பணியாற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன பணியாளர்கள் அல்லது அதிகாரிகள் நலன் கருதி அனேகமாக இந்த ரயில் சேவை அறிவிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
கணக்கு தமிழ்நாட்டுல.. லாபம் கேரளாவுக்கு
மேலும் திருவனந்தபுரம்- பெங்களூர் இடையே ஈரோடு திருப்பத்தூர் வழியாக புதிய ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் வழியாகத்தான் ரயில்கள் இயக்கப்பட்டாலும் என்னவோ கேரள மாநிலத்தவருக்கே அதிக பயன்.. அதாவது கணக்கு தமிழ்நாட்டுக்கு.. லாபம் கேரளாவுக்குத்தான்..