ஊரை நாறடிக்காமல் இருக்க ரயில்களில் வரப்போகிறது 'வேக்குவம் டாய்லெட்'!
டெல்லி: ரயில்களில், 'வேக்குவம் டாய்லெட்' எனப்படும், புதியவகை கழிப்பறைகளை அறிமுகப்படுத்த, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், 2016 மார்ச் 31ம் தேதி வரையிலான, 2015 - 16ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட், இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படுகிறது. அதில், பல புதிய அறிவிப்புகள் இடம்பெற உள்ளன.
அந்த வகையில், ரயில்களில் இப்போது சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'பயோ டாய்லெட்' முறையுடன், வேக்குவம் டாய்லெட்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான, ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள சாதாரண டாய்லெட்டுகளில், கழிவுகள், உடனே வெளியேறி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதையை அசுத்தமாக்குகின்றது. பயோ டாய்லெட்டில், கழிப்பறைகளுக்கு கீழே இருக்கும் தொட்டி போன்ற அமைப்பில் சேரும் கழிவுகள், தானாகவே மட்கும் வகையில் தொழில்நுட்பம் உள்ளது. இந்த டாய்லெட்டிலும் சில சிக்கல்கள் இருப்பதால், வேக்குவம் டாய்லெட் என்ற புதிய டாய்லெட்டை சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த உள்ளனர் ரயில்வே துறையினர்.
இதுவும், பயோ டாய்லெட் போல, கழிப்பறைகளின் கீழே கழிவுகளை சேர்த்துக் கொள்ளும். ஆனால் மட்க செய்யாது. ரயில் நிலையங்களில் ஆங்காங்கே, தொட்டிகள் மற்றும் குழாய்களில் கழிவுகளை திறந்து வெளியேற்ற இதில் வசதி இருக்கும்.
இதனால், ரயில் பெட்டியின் எடை அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரயில்களில் வேக்குவம் கழிப்பறைகள் அமைப்பது போல, ரயில்வே ஸ்டேஷன்களிலும் வேக்குவம் கழிப்பறைகள் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவற்றிற்கான அறிவிப்பு, ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறலாம்.
பயணிகளின் வசதி மற்றும் சொகுசுகளை அதிகரிக்கும் வகையில் ரயில் பெட்டிகள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ரயில்வே துறை, அதற்காக புதிய வடிவமைப்புகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே ரயில் பெட்டியின் வடிவமும் வருங்காலங்களில் மாற வாய்ப்புள்ளது.