ரயில் விபத்துக்களை தவிர்க்கும் 'பலே' தொழில்நுட்பம்
டெல்லி: ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். ரயில்கள் மோதிக் கொள்வதை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் மற்றும் ரயில் விபத்தை தவிரக்க வார்னிங் சிஸ்டம் ஆகியவை பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொழில்நுட்பங்களும் பயன்பாட்டுக்கு வந்தால் விபத்தை தவிர்க்கலாம்.
ரயில்கள் மோதுவதை தடுக்கும் தொழில்நுட்பத்தை அமைக்க கிலோ மீ்ட்டருக்கு ரூ.1 லட்சம் தேவைப்படும். மேலும் விபத்தை தவிர்க்கும் சிஸ்டத்தை பொருத்த கிலோமீட்டருக்கு ரூ.80 லட்சம் தேவைப்படும். இந்த தொழில்நுட்பங்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மோதல்களை தவிர்க்கும் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும்?
ரயில்வே நெட்வொர்க்கின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் ரயில் மோதல்களை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அது ரயில்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதுடன், அதன் அசைவுகளையும் கண்காணிக்கும். இதன் மூலம் பிற ரயில்கள் எங்கெங்கு உள்ளது என்பதை ரயில் டிரைவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம் வழித்தடத்தில் ரயில்கள் மோதிக் கொள்வதை தவிரக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை ரயில்வே துறையின் ஆய்வு பிரிவான ஆர்டிஎஸ்ஓ உருவாக்க உள்ளது.
வார்னிங் சிஸ்டம்
ரயில் பாதுகாப்பு வார்னிங் சிக்னல் என்னும் தொழில்நுட்பம் டிரைவர்களின் கவனக்குறவைால் ரயில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும். டிரைவர் சிக்னலை கவனிக்காவிட்டால் இந்த தொழில்நுட்பம் மூலம் ரயிலின் பிரேக் தானாக பிடிக்கும். சிக்னல்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வேகம் குறித்து இந்த தொழில்நுட்பம் தெரிவிக்கும்.