தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்; பயணிக்காவிட்டால் பாதி பணம் வாபஸ்
டெல்லி: அடிக்கடி ரயிலில் திடீர் பயணம் செய்பவரா? தட்கல் டிக்கெட் எடுத்துவிட்டு பயணிக்க முடியாமல் போய் பணத்தை இழந்தவரா? இனி கவலை வேண்டாம். தட்கல் டிக்கெட் எடுத்தும் பயணிக்க முடியாமல் போனால் இனி பாதி பணம் திரும்ப கிடைக்கும். இந்த மகிழ்ச்சியான செய்தியை விரைவில் அறிவிக்க உள்ளது இந்திய ரயில்வே நிர்வாகம்.
ரயிலில் பயணிக்க தட்கல் முறையில் முன்பதிவு செய்த பயணிகள் திடீரென பயணம் செய்ய முடியாமல் போகும் போது, டிக்கெட்டை ரத்து செய்யவோ கட்டணத்தை திரும்பபெறவோ முடியாத நிலையே உள்ளது. இனி அவ்வாறு ரத்து செய்ய நேரிட்டால் கட்டணத்தில் பாதியை திரும்பபெறும் விதமாக தட்கல் முன்பதிவு முறையை மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முன்பதிவில் மாற்றம்
தவிர தட்கல் டிக்கெட்டுக்கான முன்பதிவு நேரம் இரு பிரிவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. வகுப்பில் பயணிப்போர் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், மற்ற வகுப்பு பயணிகள் 11 மணியிலிருந்து 12 மணிவரையிலும் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தட்கல் ஸ்பெஷல் ரயில்
அத்துடன் கோடைக்கால சிறப்பு ரயில் போன்று கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய வழிதடங்களில் தட்கல் ஸ்பெஷல் என புதிய சேவையை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
டிக்கெட் புக்கிங்
ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் பிரிமீயம் ரயிலுக்கான டிக்கெட் போன்று அல்லாமல், கவுண்டர்களிலும் இந்த தட்கல் சிறப்பு ரயில்வே டிக்கெட்டை பெறமுடியும். 10 நாட்களுக்கு முன்னதாக இந்த ரயில்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட்டுகள் தற்போது பயணம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக வழங்கப்படுகிறது.
முன்பதிவு எப்படி?
தக்கல் சிறப்பு ரயிலுக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாகவும் அதிகபட்சம் 60 நாட்களுக்கு முன்பாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கட்டணம் எவ்வளவு
மேலும் தக்கல் சிறப்பு ரயில் சேவைக்கு பயணக்கட்டணம் 2ம் வகுப்பில் பயணம் செய்ய சாதாரண கட்டத்தில் இருந்து 10 சதவீதம் அதிகமாகவும், பிறவகுப்புகளுக்கு அடைப்படை கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படும்.