ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி.. ரயில்வே அறிவிப்பு
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் சனிக்கிழமை 31வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 118 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ரயில்வே வீரர்களுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு பணி உயர்வும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட உள்ளன.
இதுதவிர முதல் 8 இடங்களுக்குள் வரும் வீரர்களுக்கு ரூ.30 லட்சமும், போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இந்திய ரயில்வே துறையைச் சேர்ந்த 35 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் இந்திய ஒலிம்பிக் கழகமும் இதுவரை இல்லாத அளவிற்கு பரிசுகளை அறிவித்துள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட உள்ளன. இந்திய ஒலிம்பிக் கழகம் இவ்வளவு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். அதேபோல் பயிற்சியாளர்களுக்கும் முறையே ரூ.25 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் என பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.