ரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு வெறும் 6 ரயில்கள் தான் அறிவிப்பு
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வெறும் ஆறு ரயில்கள் தான் கிடைத்துள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா 2014ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் 5 பிரீமியம், 5 ஜன் சதாரன், 5 புறநகர் ரயில்கள், 6 ஏ.சி. ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள், 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவற்றை அறிவித்தார். இது தவிர 9 பாதைகளில் புதிய அதிவேக ரயில்கள் விடுவது குறித்தும், 11 ரயில் சேவை நீட்டிப்புகள் குறித்தும் அறிவித்தார்.
58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு வெறும் ஆறு ரயில்களே கிடைத்துள்ளன. ஷாலிமார்-சென்னை ஏ.சி. எக்ஸ்பிரஸ், ஜெய்பூர்-மதுரை ஏ.சி. எக்ஸ்பிரஸ், கான்பூர்- நாக்பூர்- மைசூர்- பெங்களூர்- சென்னை இடையே அதிவேக ரயில், சென்னை- விசாகப்பட்டினம் இடையே வாராந்திர புதிய ரயில், அகமதாபாத்-சென்னை இடையே வாரம் இருமுறை செல்லும் ரயில், யஷ்வந்த்பூர்-ஓசூர் இடையே வாரம் 6 நாட்கள் செல்லும் ரயில் ஆகிய ஆறு ரயில்கள் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
தமிழகத்திற்கு குறைவான ரயில்கள் அளித்துள்ளதை எதிர்த்து தமிழக எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.