புல்லட் ரயில் வேகத்தில் ரயில்வே பட்ஜெட்டை படித்து முடித்த ஜேட்லி - வரலாற்றிலேயே அதிக தொகை ஒதுக்கீடு
இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே மிக அதிக தொகையாக 1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
Recommended Video
டெல்லி: இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே மிக அதிக தொகையாக 1.48 லட்சம் கோடி நிதி 2018ம் பட்ஜெட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த முறையை தொடர்ந்து இந்த முறையும் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைந்து தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்திய ரயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே மிக அதிக தொகையாக 1,40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே பட்ஜெட்டை ஜேட்லி புல்லட் ரயில் வேகத்தில் வாசித்து முடித்தாலும், பெரிதாக கடந்த கால பட்ஜெட்டிற்கும் தற்போதைய பட்ஜெட்டிற்கு வித்தியாசமில்லை என்றே கருதப்படுகிறது.
எஸ்கலேடர்ஸ் அமைக்க திட்டம்
தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேயில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டின் போது ஜேட்லி தெரிவித்தார். இதேபோல 25ஆயிரம் பயணிகளுக்கு மேல் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் எஸ்கலேடர்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இதன்படி நாட்டில் பல நூறு ரயில் நிலையங்களுக்கு எஸ்கலேடர்ஸ் வசதி செய்ததரப்படவுள்ளதாக தெரிவித்தார்
புதுப்பிக்கப்படும் ரயில்நிலையங்கள்
நாட்டில் பல ரயில்நிலையங்கள் மோசமான நிலையில் உள்ளதாக தொடர் புகார்கள் எழுவதை தொடர்ந்து, சிதலமடைந்துள்ள ரயில்நிலையங்களை புனரமைக்கவும், புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜேட்லி தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டில் உள்ள சுமார் 600 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன.
ரயில் விபத்து தடுக்கப்படும்
நாட்டில் சமீபகாலமாக ரயில்விபத்துகள் அதிகரித்து வருவதால் பல உயிர் பலியும், சேதாரங்களும் ஏற்படுவதால், விபத்துகளை தடுக்க 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்கில் ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் பல ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பனிமூட்டத்தின்போது ஏற்படும் ரயில் விபத்துகளை தவிர்க்க சிறப்பு கருவிகள் வாங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரம்பூரில் புதிய ஆலை
சென்னை பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று அதற்கான திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தேவையான அதிநவீன ரயில்பெட்டிகள் தயாரித்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காமிரா பொருத்தம்
நாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களும் டிஜிட்டலாக மாற்றப்படும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். தற்போது முக்கிய ரயில்நிலையங்களில் மட்டும் உள்ள வை-பை, சிசிடிவி காமிரா வசதி அனைத்து ரயில்நிலையங்களிலும் அமைக்கப்படும் என்றும் இதற்காக கணிசமான ஒரு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பெங்களூரு புறநருக்கு ரயில்
பெங்களூருவில் 17,000 கோடி ரூபாய் செலவில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும். இதற்கான திட்ட பணிகள் தொடங்கப்பட்டு படிப்படியாக நிலங்களை கையகப்படுத்தி தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல புறநகர் பகுதிகள் பெங்களூருடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை ரயில் பாதை
மேலும் நாட்டில் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும் என்றும், 18 ஆயிரம் கிலோ மிட்டருக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.