ரயில்வே பட்ஜெட் 2015-16: சலுகைகளை விட வருவாய் குறித்த திட்டங்களே அதிகமாக இடம்பெறும்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த பட்ஜெட் மக்களுக்கான சலுகைகளை விட அரசுக்கான வருவாயைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரயில்வே துறையின் வருவாயைப் பெருக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமையும், மக்களின் வசதிகள் சார்ந்த திட்டங்கள் இரண்டாம் பட்சமாகவே முக்கியத்துவமும் தரப்படலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்திய ரயில்வேயின் நிதிநிலைமை மோசமாக இருக்கின்ற காரணத்தினால் வருவாயை அதிகரிக்கும் வகையிலேயே இந்த பட்ஜெட் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "மேக் இன் இந்தியா" திட்டத்தினைக் கருத்தில் கொண்டும் திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்திருக்கின்ற போதிலும் வருவாயை உயர்த்தும் வகையில் சில கெடுபிடிகளை ரயில்வே அமைச்சர் முன்வைக்கலாம் என்றும் தெரிகின்றது.
எனினும், நிதி நெருக்கடியால் புதிய அறிவிப்புகள் அதிக அளவில் இந்த பட்ஜெட்டில் இடம் பெறுவது கேள்விக்குறிதான் என்று வல்லுனர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.