ரயில்வே பட்ஜெட் தாக்கலானது!
டெல்லி: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பொது பட்ஜெட் வரும் 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வழக்கமாக பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அதன்படி 2016-17-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும்.
இந்தப் பட்ஜெட்டில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கட்டணம் உயருமே?
ரயில்வே பட்ஜெட் என்றதுமே மக்களிடம் முதலில் எழும் கேள்வி, ‘ரயில் கட்டணம் உயருமா?' என்பது தான். சுரேஷ் பிரபு கடந்த ஆண்டு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டிலும் கட்டணம் உயர்த்தப்படவில்லை ஆனால், இந்தாண்டு பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிக்க மேலும் பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் ரயில்வே துறை உள்ளது.
நிதி தேவை...
மேலும், 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளமும் அளிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற தேவைகளை எதிர்கொள்ள ரயில்வே துறைக்கு பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. இதனால் ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது.
சட்டசபைத் தேர்தல்...
ஆனால், இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டண உயர்வு இருக்காது என்றே ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனெனில் விரைவில் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், டீசல் விலையும் குறைந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம்...
இந்தச் சூழ்நிலையில், ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அதனை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சிக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு இருக்காது எனக் கூறப்படுகிறது.
புதிய ரயில்கள்...
அதேபோல், கடந்த பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடங்களில் புதிய ரயில்களை இயக்கிய பிறகுதான் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று அப்போது விளக்கமளிக்கப்பட்டது. எனவே, இந்த பட்ஜெட்டிலும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாது என்றேத் தெரிகிறது.
சரக்குப் போக்குவரத்து...
ரயில்களில் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை சுரேஷ் பிரபு வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைகள் பூர்த்தி...
இது தொடர்பான கேள்விக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், "நாட்டு நலனையும் ரயில்வே துறையின் நலனையும் கருத்தில் கொண்டு பட்ஜெட்டை தயாரித்துள்ளோம். அனைத்து தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான பட்ஜெட் அளிக்க முயற்சித்து இருக்கிறோம். பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு அடிப்படை உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோம்.
விளம்பரங்களால் வருமானம்...
கட்டண உயர்வு அல்லாது, விளம்பரங்கள்,வணிகமயமாக்குதல், உபரி நிலம், போன்றவற்றின் மூலமாக ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான பிரத்யேகமான இயக்குநரகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வருமானம் குறைவு...
ரயில்வே துறையின் வருமானம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மற்ற போக்குவரத்துகள் வழியாக நடைபெறும் சரக்குப் பரிமாற்றத்தை ஒப்பிடும்போது ரயில்வே மூலம் சரக்குப் போக்குவரத்து நடைபெறுவது குறைந்து வருகிறது' என்றார்.