அத்வானி, மோடி முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்தால்.. இனி கட்டண சலுகை கிடைக்காது!
டெல்லி: ரயில்களில் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்குத் தற்போது பயணக் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அதை முழுமையாக ரத்து செய்யப் போகிறதாம் மத்தி அரசு.
இதுதொடர்பாக மத்திய ரயில்வே துறை, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாம். இதை ஏற்று இந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், கலைஞர்கள், விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள், போரில் கணவனை இழந்த விதவைகள், டாக்டர்கள், பத்திரிகையாளர்கள் என கிட்டத்தட்ட 53 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் தற்போது ரத்து செய்யப்பட்டு சலுகை அளிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ. 1400 கோடி வரை செலவாகிறதாம். இந்த செலவை மிச்சப்படுத்த தற்போது ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதாவது இந்த 53 பிரிவினருக்கும் வருகிற நிதியாண்டு முதல் கட்டணச் சலுகையை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாம் ரயில்வே.
ரயில்வேயின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்று தெரிகிறது. மூத்த குடிமக்களுக்கான சலுகையில் மத்திய அரசு கைவைப்பது எந்த அளவுக்கு சரிவரும் என்று தெரியவில்லை.
இது நடந்தால் அத்வானி, நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் கூட ரயிலில் பயணம் செய்வதாக இருந்தால் இந்த சலுகையை இனிமேல் பெற முடியாது.