ரயில் நீர் உள்பட ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி
ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வசூல் செய்ய வேண்டும் என்பதை நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி: ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீர் உள்பட அனைத்துக்கும் 5 சதவிகித ஜிஎஸ்டி வசூல் செய்ய வேண்டும் என்பதை நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் ரயில் நிலையங்களில் விற்பனையாகும் பொருட்கள் விலை உயரும்.
நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு அடுக்கு வரி முறை அமல்படுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய உணவு பொருட்கள் உட்பட பல 5 சதவீதத்தில் வைக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் தொழில்துறையினர் கோரிக்கைக்கு ஏற்ப இந்த வரிவிதிப்பில் பல முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கார் உட்பட ஆடம்பர பொருட்கள் 28 சதவீத ஜிஎஸ்டியில் உள்ளன.
ஐஆர்சிடிசி அல்லது ரயில்வே கேன்டீன்கள், ரயில் நிலையங்கள், பிளாட்பாரங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர், உணவு பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பது தொடர்பாக ரயில்வே துறைக்கு சந்தேகம் எழுந்தது. எனினும் ரயில்நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பல பொருட்கள் விலை அதிகரித்தே விற்பனை செய்யப்பட்டன. ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கினால் கூட 40 ரூபாய் வரை செலவாகும். 2 பஜ்ஜி 40 ரூபாய் ஒரு டீ 10 ரூபாய் ரயில் நீர் 15 ரூபாய் எனில் ரயில்களுக்குள் விற்பனை செய்யப்படும் நீர் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதனிடையே ஜிஎஸ்டி வரி வசூலிப்பது பற்றி விளக்கம் கேட்டு கடந்த மார்ச் 31ஆம் தேதி நிதியமைச்சகத்துக்கு ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியது.ரயில்வே கேன்டீன், கேட்டரிங் சேவைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் சந்தேகங்கள் உள்ளன. இதனால் வரியை வசூலிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இதற்கு நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்தியன் ரயில்வே அல்லது ஐஆர்சிடிசி அல்லது அவர்களிடம் உரிமம் பெற்றவர்கள் ரயிலிலோ பிளாட்பாரங்களிலோ விற்பனை செய்யும் உணவு மற்றும் பானங்கள் அனைத்துக்கும் 5 சதவீத வரி விதித்து வசூல் செய்ய வேண்டும். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
ரயில்வே கேன்டீன்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான குழப்பம் நீக்கப்பட்டுள்ளது. இனி கேன்டீன்கள், ரயில் நிலையங்கள், ரயில்களில் உள்ள கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் ரயில் நீர், குளிர்பானங்கள், காபி, டீ, பூரி, சப்பாத்தி, பிரியாணி, சாம்பார் சாதம், தயிர்சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் அனைத்தும் 5 சதவிகிதம் மேலும் விலை அதிகரிக்கும்.
அதெல்லாம் சரிதான் ரயில் கேண்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமாக இருக்குமா? அதற்கு சரியான பில் தருவாங்களா பாஸ்?