டீசல் விலை குறைந்தாலும்... ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
பெங்களூரு: டீசல் விலை குறைந்து இருந்தாலும் ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் புதிய ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சுரேஷ் பிரபு. அப்போது அவர் கூறியதாவது:-
பயணிகளுக்கான செலவில் இருந்து 50 சதவீதத்தை மட்டுமே ரயில்வே துறை திரும்ப பெறுகிறது. பயணிகளுக்கு ஏற்கனவே அதிகளவில் மானியம் வழங்கப்படுகிறது. அதனால் டீசல் விலை குறைந்து இருந்தாலும் ரயில் கட்டணம் குறைக்க வாய்ப்பு இல்லை. அதிவேக ரயில் சேவையை தொடங்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவு ரயில்கள் அதிக நிறுத்தங்களில் நிற்பதால் அதன் வேகத்தை அதிகரிக்க முடியவில்லை. வருகிற ரயில்வே பட்ஜெட்டில் புதிய செயல் திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
அவுரா ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் தாக்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் தவறான முறையில் நடந்துகொள்ளக்கூடாது என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகளிடம் மனித நேயத்துடனும், மிகவும் மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளேன். யாராவது ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் இதுபோல் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவுகிறது.
பயணிகளிடம் மனித நேயத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.