மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம். தமிழக அரசு ஒத்துழைக்காததால் தாமதம்.! மத்திய அரசு
டெல்லி: தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் மதுரை - தூத்துக்குடி இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டம், தாமதமாகி வருவதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் கூறியுள்ளார்.
மக்களவையில் இது பற்றி திமுக உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். வரும் 2021-ம் ஆண்டுக்குள் மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு விடுமா என கனிமொழி கேட்டார்.
மத்திய அமைச்சர் தனது பதிலில் தீர்க்கப்படாத சில பிரச்சனைகளால் தான் இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதமாவதாக கூறியுள்ளார். பிரச்சனைகள் என நீங்கள் குறிப்பிடுவது எதை 2021-க்குள், ரூ.1,182 கோடி மதிப்பீட்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை ரூ.382 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை திட்டம் திட்டமிட்டபடி முடிக்கப்பட்டு விடுமா என கனிமொழி கேள்வி எழுப்பினார். கனிமொழியின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய ரயில்வே இணை அமைச்சர் சென்ன பசவப்பா, திட்டத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு இன்னும் அளிக்கவில்லை என கூறினார். தமிழக அரசு நிலத்தை ஒப்படைத்த பிறகு திட்டப்பணிகள் துவங்கி விடும் என்றார்.
தமிழகத்தில் உள்ள 5 ரயில்வே அச்சகங்கள் மூடப்படுவதற்கான அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பினார் கனிமொழி. இதற்கு பதிலளித்த அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே டிஜிட்டல் மயமாக்கப்படுவதின் ஒரு பகுதியே அச்சகங்களை மூடும் முடிவு என்ற அவர், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய ராமாநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, காரைக்குடி - அறந்தாங்கி - பட்டுக்கோட்டை இடையே ரயில் சேவை லெவல் கிராசிங்குகளில் பணியாளர்கள் இல்லாததால் நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த வழித்தடத்தில் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகள் உள்ளதாக குறிப்பிட்டார். ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் போக்குவரத்திற்கு மக்கள் சிரமப்படுவதாக கூறினார். இந்த வழித்தடத்தில் லெவல் கிராசிங்குகளில் பணியாளர்களை அமர்த்தி மீண்டும் ரயில்சேவையை துவக்க கோரிக்கை விடுத்தார்.
பின்னர் பேசிய பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், பெரம்பலூரையும் , திருச்சி, அரியலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றார். இதன் மூலம் வேளாண் விளைபொருட்களை அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு சென்று விற்க விவசாயிகளுக்கு வழி கிடைக்கும் என குறிப்பிட்டார்.