"தடம் புரண்டது" வாட்டாள் நாகராஜின் ரயில் மறியல் போராட்டம்... எல்லா ரயிலும் நல்லா ஓடுது..!
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்புவிடுத்த ரயில் மறியல் போராட்டம் தோல்வியடைந்தது. கர்நாடகாவில் அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயங்குவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்கான நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் நீரை திறக்கக் கூடாது என்பது வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினரின் கோரிக்கை.
உச்சகட்ட வெறியாட்டம்
இந்த கோரிக்கையை முன்வைத்து 2 வார காலமாக கர்நாடகாவை கலவர பூமியாக்கிவிட்டனர் கன்னட அமைப்பினர். தமிழர்களை பார்த்த இடத்தில் தாக்குவது, தமிழக வாகனங்களை தீக்கிரையாக்குவது என வெறியாட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியிருந்தன.
ரயில் மறியல்
இந்த நிலையில் இன்று ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என வாட்டாள் நாகராஜ் அழைப்புவிடுத்திருந்தார். ஆனால் வாட்டாள் நாகராஜின் இந்த போராட்டத்துக்கு கர்நாடகாவில் ஆதரவு இல்லை.
ஆதரவு இல்லை
மாண்டியா மற்றும் பெங்களூருவில் மட்டும் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட சிலர் ரயில் மறியல் போராட்டத்துக்கு முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
வழக்கம்போல..
கர்நாடகா முழுவதும் ரயில்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. அனைத்து ரயில் நிலையங்களிலும் இயல்பு நிலையே நீடிப்பதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.