ரயில்வேயில் 36 ஆண்டு கால விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு - பியூஷ் கோயல் அதிரடி
ரயில்வே துறையில் 36 ஆண்டு காலமாக நிலவும் விஐபி கலாச்சாரத்துக்கு முடிவுகட்டும் விதமாக முக்கிய அறிவிப்பாணையை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டெல்லி: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். 36 ஆண்டு கால விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரயில்வே நிர்வாகம் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பல்வேறு கட்டுப்பாடுகளை ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ரயில்வே வாரிய தலைவரோ, அதன் உறுப்பினர்களோ வரும்போது அவர்களை வரவேற்க ரயில்வே பொது மேலாளர் நேரில் வர வேண்டும் என்ற 36 ஆண்டுக் கால நடைமுறை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு வீட்டு வேலை
ரயில்வே உயர் அதிகாரிகள், கடைநிலைப் பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணி புரியும் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே பணி மட்டுமே
அதிகாரிகளின் வீடுகளில் 30 ஆயிரம் கடைநிலை ஊழியர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இனி ரயில்வேப் பணிகளில் மட்டுமே அவர்கள் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்கொடை பெற தடை
ரயில்வே நிர்வாகத்தின் உத்தரவை அடுத்து சுமார் 7,000 ஊழியர்கள் ரயில்வே பணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோன்று எந்த அதிகாரியும் நன்கொடைகளையோ, பரிசுகளையோ, பூங்கொத்துகளையோ பெறக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களோடு மக்களாக பயணம்
உயரதிகாரிகள் அதிக கட்டணம் மற்றும் சொகுசு வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வதை விட்டுவிட்டு, 3 அடுக்கு, படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டும். பயணிகளுடன் கலந்து அவர்களின் பிரச்னைகளை அறிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள்
இந்த அறிவிப்புகள் பற்றி பேசிய ரயில்வே நிர்வாகத் தலைவர் அஷ்வானி லொஹானி கூறும்போது, பூங்கொத்து உள்ளிட்ட எந்த பரிசுப் பொருட்களையும் பெறக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பணியில் இருக்கும்போது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும்போதும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.
பியூஷ் கோயல் அதிரடி அறிவிப்பு
மத்திய ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்ற பிறகு ரயில் விபத்துகளைக் குறைக்க தண்டாவாளங்களை சீரமைப்பது, ஆளில்லா கிராசிங்குகளை முற்றிலும் ஒழிப்பது ஆகியவற்றை விரைவில் சாத்தியப்படுத்துவதாக அறிவித்தார்.