ரயில் பெட்டிகளில் தூங்கும் நேரத்தை அதிரடியாக குறைத்தது ரயில்வே நிர்வாகம்
ரயில் பெட்டிகளில் தூங்கும் நேரத்தை அதிரடியாக குறைத்து ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: ரயில் பெட்டிகளில் இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் பெர்த்தில் தூங்கும் நேரம் என்பது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இருந்தது. எனினும் நெடுந்தூரம் செல்லும் ரயில்களில் படுக்கை வசதிகளை முன்பதிவு செய்யும் நபர்கள் இரவு, பகல் பாராமல் தூங்கி கொண்டே சென்று வருகின்றனர். இதனால் மத்தியிலும், கீழேயும் யணிகளுக்குள் சண்டை நிகழ்கிறது.
இந்த பூசலை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் பெர்த்துகளில் தூங்கும் நேரத்தை ஒரு மணி நேரமாக குறைத்தது. அதன்படி இனி 9மணிக்கு தூங்கும் நேரம் என்பதை இரவு 10 மணியாக்கி சுற்றறிக்கை விடுத்துள்ளது.
மற்ற நேரங்களில் அந்த பெர்த்துகளில் பயணிகள் உட்கார அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில் உடல்நலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் பெர்த்துகளில் தூங்க அனுமதிக்க வேண்டும் என்று பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விதியானது படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து முன்பதிவு ரயில்களுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.