லீவ்லயே இருக்கும் 13,000 ஊழியர்கள்... நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப ரயில்வே முடிவு!
நீண்ட நாட்களாக விடுப்பில் இருக்கும் சுமார் 13 ஆயிரம் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டெல்லி: அனுமதியற்ற நீண்ட நாள் விடுப்பில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி மொத்தமுள்ள 13 லட்சம் ஊழியர்களில் 13 ஆயிரம் பேர் விடுப்பில் இருப்பதாகவும் அவர்களை பணி நீக்கம் செய்யவும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து பொதுத்துறை நிறுவனம் என்றால் அது இந்தியன் ரயில்வே தான். எப்போதும் மக்களுக்கு சேவை வழங்கும் இந்தத் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் மக்களுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படுவது மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நீண்ட நாள் விடுப்பில் இருக்கும் ஊழியர்களின் விவரத்தை சேகரித்து தருமாறு உத்தரவிட்டிருந்தார். இதன்படி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் எடுக்கப்பட்ட ஊழியர்கள் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 13 லட்சம் ஊழியர்களில் சுமார் 13 ஆயிரம் பேர் அனுமதியற்ற நீண்ட நாள் விடுமுறையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீண்ட நாட்கள் விடுப்பில் இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக அவர்களை பணி நீக்கம் செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விடுப்பில் இருக்கும் இந்த 13 ஆயிரம் பேரும் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.