அதிவேக விரைவு ரயில்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
டெல்லி: சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு பத்து சதவிகித டிக்கெட்டுகளுக்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கூடுதலாக 10 சதவிகித கட்டணம் வசூலிக்கப்படும்.
இதன் மூலம் ரயில் கட்டணங்கள் விமான கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படும். தட்கல் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தற்போதுள்ள முறையே கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை முதல் வகுப்பு ஏசிக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் சேர் கார் 50 சதவீதம் அதிகரிக்கிறது. 42 ராஜ்தானி, 46 சதாப்தி மற்றும் 54 துரந்தோ ரயில்கள் மொத்தம் உள்ளன. இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கட்டண உயர்வு நாளை அமலாகவுள்ள நிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.