நடுத்தர வகுப்பினரின் தலையில் கை வைக்கும் மோடி அரசு... ரயிலில் 2ம் வகுப்பு பெட்டிகள் ஒழிப்பு!
டெல்லி: கூடிய விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே துறையை நவீனப்படுத்தவும், பயணிகள் வசதியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ள இந்தியன் ரயில்வே நிர்வாகம், அதற்குத் தேவையான நிதியை பயணிகளின் டிக்கெட் வாயிலாக பெற முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி, நேரடியாக டிக்கெட் விலையை உயர்த்தினால் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். எனவே, எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர்பாஸ்ட் ரயில்களில் 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக 3 அடுக்கு ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தெற்கு ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
நிரந்தர நீக்கம்...
இதன்படி, முதல்கட்டமாக எர்ணாகுளம்-நிஜாமுதீன் (டெல்லி) மங்களா எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்:12617) எஸ்-2 என்ற படுக்கை வசதி கொண்ட 2 ஆம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி-4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.
அதிக கட்டணம்...
இதன் மூலம் அந்த ரயிலில் 2 ஆம் வகுப்பு பெட்டிகள் 10 ஆக குறைந்துள்ளது. அதாவது, 2 ஆம் வகுப்பு படுக்கைக்கான 72 டிக்கெட்டுகள், ஏ.சி. கட்டணத்துக்கு மாறிவிட்டது. இந்த ரயிலில் எர்ணாகுளத்தில் இருந்து டெல்லிக்கு 2 ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.925. ஆனால், மூன்றடுக்கு ஏ.சி. கட்டணம் ரூ.2,370 என்பது குறிப்பிடத்தக்கது.
தட்கல் முறை...
அந்த குறிப்பிட்ட 2 ஆம் வகுப்பு பெட்டிக்கு ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு தட்கல் முறையில் மாற்று இடம் வழங்கப்படுகிறது.
முடிந்தவரை ஒரே பெட்டி...
ஞாயிற்றுக்கிழமை இதுபோல மாற்றி வழங்கியதால் ஒரே குடும்பத்தினர் பல்வேறு பெட்டிகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. முடிந்தவரை ஒரே பெட்டியில் படுக்கை ஒதுக்குவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருமார்க்க ரயில்களிலும்...
அதேபோல, சென்னை எழும்பூர்-மங்களூர் சென்டிரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16859) ரயிலில் எஸ்-7 என்ற 2 ஆம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமையும், மங்களூர் சென்டிரல்-சென்னை எழும்பூர் (வண்டி எண்:16860) எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்-9 என்ற 2 ஆம் வகுப்பு பெட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதலும் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி-4 என்ற ஏ.சி.சேர்கார் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.
தீவிர ஆலோசனை...
அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்களிலும் 2 ஆம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்றிவிட்டு, ஏ.சி. பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏ.சி. பெட்டிகள் தயாரிப்பு...
அதேபோல், 2 ஆம் வகுப்பு பெட்டிகள் தயாரிப்பதை குறைக்கவும், அதற்கு பதிலாக ஏ.சி. பெட்டிகளை அதிகமாக தயாரிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷனில் எந்த 2 ஆம் வகுப்பு பெட்டி தயாரிக்கவும் அனுமதி கொடுக்கவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நண்பன்...
பேருந்து கட்டணங்கள் ஒருபுறம் தாறுமாறாக ஏறியுள்ள நிலையில், நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி ஏழை மக்களுக்கு ரயில் தான் உற்ற நண்பனாக விளங்குகிறது. இந்நிலையில், மறைமுகமாக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் இந்தத் திட்டம் வசதியானவர்களுக்குத் தான் சொகுசான பயணமாக அமையும்.
எதிர்ப்பு...
எனவே, கூடுதல் செலவை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்கு ரயில் பயணிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.